Bihar SIR: பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளில் போலி வாக்காளர்கள்! ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளில் போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சராக கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இருக்கிறார். இக்கட்சி தேசிய அளவில் பாஜக தலைமை வகிக்கும், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில்' இருக்கிறது.

இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் ஆணையம் களத்தில் குதித்தது. ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை கணக்கில் கொள்ளாமல், புதிய வாக்காளர் பட்டியலை தயாரிப்பதுதான் இதன் பணி. வாக்காளர் பட்டியலில் பெயர் வர வேண்டும் எனில் ஆவணங்களை காட்ட வேண்டும். பாட்னா உள்ளிட்ட நகரங்களில் ஆதாரையும், ரேஷன் அட்டையையும் அடையாளமாக ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில் இதை ஏற்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இப்படி இருக்கையில், ஒரு வழியாக வாக்காளர்களை இறுதி செய்து வரைவு வாக்காளர் பட்டியரை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், 65 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களித்தவர்களை விட, இந்த சட்டமன்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் குறைந்திருக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியது. உயிரிழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், இரண்டு வாக்காளர் அட்டையை வைத்திருப்பவர்கள் ஆகியவற்றை கண்டறிந்து நீக்கியுள்ளோம். எனவேதான் 65 பேரின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க.. எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளில் போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருந்தார்.
அதாவது, ""மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், வாக்கு திருட்டு என்ற எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தின. வாக்காளர் பட்டியல் கையாளுதல் மற்றும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கவனிக்க வேண்டிய விஷயம். லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து 'இந்தியா' கூட்டணி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியபோது எந்தப் பதிலும் இல்லை. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவின் மக்கள் தொகையையும் தாண்டியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணுத் தரவுகளை வழங்கியது, அதைச் சரிபார்க்க 30 வினாடிகள் ஆகும். இந்தத் தரவு பகுப்பாய்வு செய்ய முடியாத அளவுக்கு இருப்பதால், இதைப் பாதுகாப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் என்ன செய்ய முயற்சிக்கிறது? தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே எந்திரத்தால் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது.
காங்கிரஸ் நடத்திய ஆய்வில், கர்நாடகாவில் உள்ள மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், தவறான முகவரிகள், மற்றும் மொத்த வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் பதிவான 6.5 லட்சம் வாக்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் "கள்ள ஓட்டுக்கள்".
கர்நாடக தகவல் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு வாக்காளர் பட்டியலிலும் இதுவே ஆதாரம். இது இந்திய அரசியலமைப்புக்கும், இந்தியக் கொடிக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றம். இந்தக் குற்றம் நாடு முழுவதும், மாநிலம் மாநிலமாகப் பெரிய அளவில் நடைபெறுகிறது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆகியவை இப்போது ஒரு குற்றத்திற்கான ஆதாரங்களாக உள்ளன. தேர்தல் ஆணையம் அவற்றை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications