அமெரிக்க அதிபர் தேர்தல்...பாஜக பெயரை தேர்தல் பிரச்சாரத்தில்...பயன்படுத்த தடை!!
டெல்லி: அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அந்த நாட்டில் இருக்கும் பாஜகவினருக்கு அந்தக் கட்சியின் வெளி விவகாரங்களுக்கான பொறுப்பாளர் விஜய் சவ்தைவாலே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபருக்கு மைக் பென்ஸ் இருவரும் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபருக்கு ஜோ பைடனும் துணை அதிபருக்கு கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பாஜகவினர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஹவுடி மோடி, நமஸ்தே ட்ரம்ப் ஆகிய வாசகங்கள் அடங்கிய புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, தனது கட்சியினர் தங்களது சொந்த செல்வாக்கில் தான் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றும் பாஜக பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருகட்சிகளுக்கும் பாஜக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அங்கு இருக்கும் பாஜக நண்பர்களுக்கு பாஜக வெளி விவகாரங்களுக்கான பொறுப்பாளர் விஜய் சவ்தைவாலே கடிதம் எழுதியுள்ளார். அதில், ''அவர்களது நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுப்பது ஒவ்வொருவரின் உரிமை. வெளிநாட்டில் வசிக்கும் பாஜக நண்பர்கள் தங்களது தனிப்பட்ட சொந்த செல்வாக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது. அமெரிக்க தேர்தலில் பாஜக கட்சி எந்த வகையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அமெரிக்காவின் இரண்டாவது உயரிய பொறுப்புக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவழியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இங்கு பாஜக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. அங்கு வசிக்கும் இந்தியர்களின் இறையாண்மையைப் பொறுத்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
பீகாரில் பெரும் தலைவலி... ராம்விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு கல்தா கொடுக்கப் போகும் பாஜக கூட்டணி?
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வர்த்தகம் மற்றும் அரசியல் ரீதியில் உறவுகள் உள்ளது. இந்தியாவிலும் தேர்தலில் போட்டியிடும் இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸில் இருக்கும் ஹூஸ்டனில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொண்டு ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில், அகமதாபாத்தில் இருவரும் கலந்து கொண்ட நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, அமெரிக்காவில் வசிக்கும் பாஜகவினர் இதுதொடர்பான புகைப்படங்களை பயன்படுத்தி ட்ரம்ப்புக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதையடுத்தே பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.