கொரோனா 2ஆம் அலை அவப்பெயர்களை துடைத்தெறிய.. பாஜக வகுத்துள்ள அதிரடி வியூகம்.. நட்டா திட்டம் பலன் தருமா
டெல்லி: கொரோனா 2ஆம் அலையைக் கையாண்ட விதம் காரணமாக பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரைப் போக்க அக்கட்சித் தலைமை புதியதொரு திட்டத்தைத் தீட்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
கொரோனா பரவல் அதிகரித்தற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. மத்திய அரசு கொரோனாவின் தீவிர தன்மையை உணரவில்லை என்றும் இதனால் தான் தடுப்பூசிகளை அதிகளவில் ஏற்றுமதி செய்தன என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
கடும் அதிருப்தி
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. ஒரு புறம் கொரோனாவாலும் மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, தக்க நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் போவது உள்ளிட்ட காரணங்களாலும் பலர் உயிரிழந்தனர். இது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிருப்தியில் உள்ளதால், இது அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல்களில்கூட எதிரொலிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஜே பி நட்டா
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அவப்பெயரைப் போக்கும் வகையில் புதியதொரு திட்டத்தை அக்கட்சியின் தலைமை தீட்டியுள்ளது. "சேவா ஹாய் சங்கதன்" என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தடுப்பூசி பிரச்சாரங்கள், நிவாரண பணிகள் மற்றும் கிராமங்களில் சுகாதார பொது நிகழ்ச்சிகளில் பாஜக தொண்டர்கள் உதவ வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா அறிவுறுத்தியுள்ளார். தொண்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள 45+ மேற்பட்டவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி பணிகள்
மேலும், 18-44 வயதுடையவர்களில், இணை நோய் உள்ளவர்கள், டெலிவரி பாய்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், செய்தித்தாள் விநியோகஸ்தர்கள், சிலிண்டர் விநியோகிப்பவர்கள் என எளிதாக வைரஸ் பாதிப்பு ஏற்படக் கூடியவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள பாஜக தொண்டர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீட்டில் 12 வயதுக்குக் குறைவான சிறார்கள் இருந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா 3ஆம் அலையைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடிதம்
ஜே பி நட்டாவின் அறிவுறுத்தல்களைக் குறிப்பிட்டு அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர், "பாஜக தொண்டர்கள் ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றியுள்ளவர்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் கொடுத்து உதவுங்கள். மருத்துவமனைகள் மற்றும் பிற இடங்களில் ரேஷன் மற்றும் உணவு விநியோகத்தை ஏற்பாடு செய்யுங்கள்.
உதவ வேண்டும்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதானவர்களைக் கொண்டுள்ள தனி வீடுகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். கொரோனா நோயாளிகள் டெலி மெடிசன் மூலம் மருந்து ஆலோசனை மற்றும் உதவிகளைப் பெறத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நமது தன்னார்வலர்கள் உதவ வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவப்பெயர்களைத் துடைத்தெறியும்
தெர்மல் ஸ்கேனர்கள், ஆக்ஸிமீட்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற அடிப்படை மருத்துவ உபகரணங்களைக் கையாள கிராமங்களில் உள்ள தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்க மாநில அளவில் அணிகளை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலையில் கிராமப்புறங்களில் வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது. இதனால் பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த அவப்பெயர்களைத் துடைத்தெறியும் வகையில் பாஜக இந்தப் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், நட்டாவின் இந்தத் திட்டம் பலன் தருமா என்பதை பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.