ராகுல் காந்தியின் குரலை நெறிக்க.. பாஜக புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளது.. காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி: பொருளாதாரம், சமூகம், அரசியல், சீன எல்லை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் உண்மையை பேசியதால் ராகுல் காந்தியை கண்டு பாஜக அரசு அச்சம் அடைந்துள்ளது. எனவே ராகுல் காந்தியின் குரலை நெறிக்க மத்திய பாஜக அரசு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சங்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சிக்காக நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதில் கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது பிரதமர் மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது.

அவதூறு வழக்கு தாக்கல்
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த பிறகு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், நேற்று (23 ஆம் தேதி) அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்
மேலும் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கியது. இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் குரலை நெறிக்க
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பளர் அபிஷேக் சிங்வி ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- பொருளாதாரம், சமூகம், அரசியல், சீன எல்லை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் உண்மையை பேசியதால் ராகுல் காந்தியை கண்டு பாஜக அரசு அச்சம் அடைந்துள்ளது. எனவே ராகுல் காந்தியின் குரலை நெறிக்க மத்திய பாஜக அரசு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளது.

சட்டத்தின் படி எதிர்கொள்வோம்
சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு பலவீனமானது மட்டும் இன்றி பிழையானது. இந்த தீர்ப்பு நிலைக்காது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு கருத்துக்களை தைரியமாக பேசியதற்கான விலையை ராகுல் காந்தி கொடுத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி ஆஜரானார். அரசியல் அமைப்பு சட்டம் 103 படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை கூட கேட்கவில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. சட்டத்தின் படி இதை எதிர்கொள்வோம். விரைவில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications