பாஜக உள்கட்சி பூசல் பிரச்சனை.. கண் சிவந்த அமித்ஷா.. பயத்தில் மூத்த நிர்வாகிகள்
டெல்லி: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்கும் முயற்சியில் பாஜக இந்த முறை தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியலை கண்காணிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் பாஜகவில் சமீபகாலமாக உள்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அமித்ஷா வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் பாஜக நிர்வாகிகளுக்கு உள்கட்சி பூசலை தவிர்க்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதற்கான வியூகங்களில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி தேர்தலுக்கு தயாராகியுள்ளது. மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். அந்தக் கூட்டணியில் தமாகா உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டுகிறது.

அமித்ஷா வீட்டில் ஆலோசனை
அதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியலில் தலை காட்ட தொடங்கியுள்ளார். கூட்டணியே வேண்டாம் என்று பிரிந்திருந்த அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதற்காக அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அமித்ஷா அடிக்கடி தமிழ்நாடு வரத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அமித்ஷா வீட்டில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், கேசவ விநாயகம், பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேன்ன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உள்கட்சி பூசல் பிரச்சனை
இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. கள நிலவரம், தொகுதி பங்கீடு, பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பாஜக உள்கட்சி பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் தனித்தனி அணியாக செயல்படுவதாக புகார் உள்ளது. இந்த புகார் டெல்லி வரை சென்றுள்ளது.
இதனால் அமித்ஷா இன்றைய கூட்டத்தில் டென்ஷனாகி பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வழங்கியுள்ளது. அதில், "சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனால், தமிழக பாஜகவில் உள்கட்சி பூசல் புகார்கள் வேதனையளிக்கின்றன. தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும் விதமாக, உள்கட்சி பிரச்சனைகளை தவிர்ப்பது கட்சி நலனுக்கு மிகவும் முக்கியம்.
உள்கட்சி பூசல், கருத்து வேறுபாடு ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து கட்சி பணிகளில் கவனம் செலுத்துவது மிக மிக நல்லது." என்று அழுத்தமான குரலில் அறிவுறுத்தியுள்ளார். இது பாஜக நிர்வாகிகளிடையே பரபரப்பான பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications