வேளாண் சட்டம் குறித்து சர்ச்சை கருத்து.. ஜகா வாங்கிய பாஜக! மன்னிப்பு கோரினார் கங்கனா ரனாவத்
டெல்லி: திரும்பப்பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியிருந்தார். இந்த கருத்தை பாஜக வரவேற்காத நிலையில், தன்னுடைய கருத்தை திரும்ப பெறுவதாக கங்கனா தெரிவித்துள்ளார். மட்டுமல்லாது, தனது கருத்துக்கு மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
கங்கனா ரனாவத், எம்பி ஆவதற்கு முன்பிருந்தே அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்காக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். இப்படி இருக்கையில் மூன்று வேளாண் சட்டம் குறித்து அவர் கூறியிருந்த கருத்து பாஜக தலையில் இடியை இறக்கியது. காரணம் ஹரியானா தேர்தல்தான். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஹரியான விவசாயிகளின் பங்கு மிக அதிகம். இன்னும் சில நாட்களில் ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு யுக்திகளை கையில் எடுத்து வருகிறது. ஆனால் இது எல்லாவற்றையும் நீர்த்து போக செய்யும் விதமாக அமைந்துவிட்டது கங்கனாவின் பேச்சு.
என்ன பேசினார்?: "நாட்டின் வளர்ச்சியில், விவசாயிகள்தான் நமது பலம். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எனவே ஒரு சில மாநிலங்கள் மட்டுமே எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களை, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நான் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும் பரவாயில்லை" என்று கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பினரிடைய கடும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. குறிப்பாக ஹரியானா மாநில விவசாயிகள் கங்கனாவின் கருத்தை கடுமையாக சாடியிருந்தனர்.
டேமேஜ் கன்ட்ரோல்: விஷயத்தின் தீவிரத்தையும், அதனால் ஏற்படப்போகும் பாதிப்பையும் உணர்ந்த பாஜக தலைமை, உடனடியாக டேமேஜ் கன்ட்ரோல் வேலையை தொடங்கியது. பாஜகவின் செய்தி தொடர்பாளரை வைத்து, "கங்கனா ரனாவத் கூறிய கருத்துகள் அவரின் தனிப்பட்ட அறிக்கை. விவசாய சட்டங்கள் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை" என்று சொல்ல வைத்தது. பாஜக எம்பி சொன்ன கருத்து, கட்சியினுடையது அல்ல என்று பாஜக விலகிக்கொண்டது காங்கிரஸுக்கு மேலும் சாதகமாகிவிட்டது.
விமர்சனம்: மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி பல்வேறு தலைவர்களும், கங்கனாவின் கருத்தை சகட்டு மேனிக்கு கண்டித்து தள்ளினர். விஷயம் பெரிதாகி கொண்டே இருந்தது. இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்த பாஜக தலைமை, கங்கனாவையே மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறது.
மன்னிப்பு: "ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என பேசிய எனது கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன்; எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கங்கனா வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஹரியானாவில் பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications