பீகார் சட்டசபை தேர்தல்: 2-வது கட்டமாக 46 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான 46 வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பீகாரில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 71 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
பீகார் தேர்தல்...காங்கிரஸ் பிரச்சாகர்கள் பட்டியல்...மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம்!!
வேட்பாளர் பட்டியல்
இதனையடுத்து 2-வது கட்டமாக நவம்பர் 3-ந் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் 46 பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். Bettiah தொகுதியில் ரேணுதேவி போட்டியிடுகிறார்; பைகுந்த்பூர் தொகுதியில் மிதிலேஷ் திவாரி, தனபூர் தொகுதியில் ஆஷா சின்ஹா களமிறங்குகின்றனர்.
மத்திய தேர்தல் குழு
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று கூடி வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.
ஜேடியூ-பாஜக கூட்டணி
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜேடியூ 122 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சியான ஹெச்.ஏ.எம்-க்கு 7 தொகுதிகளை ஜேடியூ ஒதுக்கும். இன்னொரு கூட்டணி கட்சியான வி.ஐ.பிக்கு பாஜக தனது ஒதுக்கீட்டில் தொகுதிகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் கூட்டணிகள்
ஜேடியூ- பாஜக கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. அதுவும் ஜேடியூவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவோம் என கூறியுள்ளது. இன்னொரு பக்கம் ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் இணைந்து மெகா கூட்டணியையும் உருவாக்கி உள்ளன.
பாஜகவின் பிரசார படை
இதனிடையே பீகாரில் தேர்தல் பிரசாரத்துக்கான 30 நட்சத்திர பேச்சாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. இதில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, ஸ்மிருதி இரானி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.