ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆக.5-ல் கறுப்பு உடையுடன் போராட்டமா? காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆகஸ்ட் 5-ந் தேதியன்று கறுப்பு உடையுடன் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம் உள்ளிட்டவற்றை முன்வைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: ஆகஸ்ட் 5-ந் தேதியை போராட்ட நாளாக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருக்கிறது. சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்துகிற ஒரு நடவடிக்கைதான் இது. ஆகஸ்ட் 5-ந் தேதிதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட புனித நாளில்தான் காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு உடை அணிந்து போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர். இதன் மூலம் காங்கிரஸின் உள்நோக்கம் அம்பலமாகிவிட்டது.

இத்தனைக்கும் அமலாக்கப் பிரிவு யாருக்கும் எந்த ஒரு சம்மனையும் இன்று அனுப்பவும் இல்லை. ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
இதேபோல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்தி இருக்கிறது. அதுவும் நாடு தழுவிய அளவில் கறுப்பு உடை அணிந்து போராடி இருக்கின்றனர். அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கிய நாளில் கறுப்பு உடை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அவமதிக்கிறது. அயோத்தி கட்டுமானப் பணிகளை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மாண்புகளையும் காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டது. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.












Click it and Unblock the Notifications