Ind vs Pak Match: ரத்தமும் தண்ணீரும் ஒன்னா பாயாதுன்னு சொன்னீங்க.. இப்போ பாக். உடன் மேட்ச் எதுக்கு? மொய்த்ரா கேள்வி!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்று சொல்லி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதனை மேற்கோள்காட்டி, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மேட்ச் எதுக்கு? என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியால் மிரண்டுபோன பாகிஸ்தான், சும்மா இருக்காமல் இந்தியா மீது தாக்குதலை தொடுத்திருந்தது. இதற்கு இந்தியாவின் பதில் தாக்குதல் உக்கிரமாக இருந்ததால், பாகிஸ்தான் இறுதியில் சரணடைந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் முதல் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, வலதுசாரிகள் இந்த போட்டி நடக்கவே கூடாது என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்தான் மஹுவா மொய்த்ரா விமர்சனம் கவனம் பெற்றிருக்கிறது. அவர் தனது x பக்கத்தில், "ரத்தமும் தண்ணீரும் பாகிஸ்தானுக்குள் ஒன்றாகப் பாய முடியாது. ஆனால் ரத்தமும் கிரிக்கெட்டும் நிச்சயமாகப் பாயலாம். அதிலும் குறிப்பாக அமித் ஷாவின் 'தகுதி மட்டுமே' கொண்ட மகனின் செல்வாக்கு இதில் இருக்கும்போது. சிறந்த அணி வெல்லட்டும்" என பதிவிட்டிருக்கிறார்.
இதில் பிரதமர் மோடியையும், அமித்ஷா மற்றும் அவரது மகனும் பிசிசிஐ தலைவராக இருக்கும் ஜெய்ஷாவையும் மொய்த்ரா கடுமையாக விமர்சித்திருக்கிறார். சரி இவர் மட்டும்தான் இப்படி விமர்சிக்கிறாரா? என்று கேட்டால் கிடையாது. ஆம் ஆத்மி கட்சியும் இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சௌரப் பரத்வாஜ் , பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீம் அஷ்ரப்பின் உருவ பொம்மையை எரித்து இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் சண்டையின்போது பகீம் அஷ்ரப், பாரத மாதாவை அவதூறாக சித்தரித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இன்று இரவு நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பகீம் அஷ்ரப் இடம்பெற்றிருப்பதால், அவர் இடம்பெற்றிருக்கும் அணியுடன் விளையாடுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி பகீம் அஷ்ரப் உருவ பொம்மையை தீயிட்டு எரித்திருந்தார்.
மறுபுறம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. இரவு 8 மணிக்கு மேட்ச் நடக்க இருக்கும் நிலையில், இன்னமும் டிக்கெட் விற்பனை மந்தமாகத்தான் இருக்கிறது. முந்தைய போட்டிகளில் இப்படி இருந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications