Budget 2021 Tamil: பட்ஜெட்டில் புதிய வரிச்சலுகைகள் வெளியாகுமா - விவசாய கடன் தள்ளுபடியாகுமா?
பட்ஜெட்டில் தனிநபர் வரி செலுத்துவோர் மீது அரசாங்கம் கொரோனா வைரஸ் செஸ் அல்லது கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்காக விவசாய கடன் தள்ளுபடியை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 24(b) இந்தாண்டு திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ், வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டிக்கு தேவையான வரி சலுகைகள் கிடைக்கும். வீடு வாங்கியபிறகு கொரோனாவால் வேலை இழந்தவர்களும் சில சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
மோடி 2.0 அரசாங்கத்தின் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் பாரம்பரிய முறைப்படி கடந்த 23 ஆம் தேதி அல்வா கிண்டி பட்ஜெட் நடைமுறையை துவக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்.
Union Budget App என்ற மொபைல் ஆப்பில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையேயும், தொழில்துறையினரிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
வேளாண் சட்டங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், விவசாயிகளை சமாதானப்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் சில அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா லாக்டவுன் அமல்படுத்தியதால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்களில் பலர் வேலை இழந்தனர். சம்பளக்குறைப்பு காரணமாக சிரமப்படுவதால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறிப்பாக சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோர் ஆகியோருக்கு உதவும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, நாடு முழுவதும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்துதல், கொரோனா காலங்களில் உணவு மற்றும் பிற நிவாரணங்களுக்கு செலவழிப்பதற்கான பணம் உட்பட நோய்த்தடுப்புக்கான முழு செலவுகளை மத்திய அரசு செய்துவருகிறது.
இதனால் ஏற்படும் மிகப்பெரிய வருவாய் பற்றாக்குறை, அரசாங்கத்தின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாகும்.
இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு புதிதாக கோவிட் 19 செஸ் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். அதிக வருமானம் கொண்டவர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட வருவாய் கொண்ட வணிகங்களுக்கோ இந்த செஸ் வரி பொருந்தும். இது பணக்காரர்களுக்கான வரியாகவே இருக்கும்.
மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆத்மநிர்பார் பாரத் சலுகை அறிவிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இன்றைய பட்ஜெட் உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை சமாதானப்படுத்த அரசு கடுமையாக முயற்சித்து வரும் நிலையில், நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்காக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில துறைகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லறை வியாபாரம் மற்றும் ஷாப்பிங் சென்டர் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஜிஎஸ்டி விதிமுறைகளை திருத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் வழங்கியுள்ள பரிந்துரைகளில், வீட்டுக் கடன் திட்டங்களில் மானியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 24(b) இந்தாண்டு திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ், வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டிக்கு தேவையான வரி சலுகைகள் கிடைக்கும். வீடு வாங்கியபிறகு கொரோனாவால் வேலை இழந்தவர்களும் சில சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
ஏழை, நடுத்தர மக்கள் கொரோனா நெருக்கடியில் இருந்து படிப்படியாக வெளியேறி வரும் நிலையில், கூடுதல் வரிச் சலுகைகளை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். மேலும், நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வரும் நிலையில், இதற்காக ஏற்பட்ட செலவுகளுக்காக வரி சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்களுக்கான வரிச் சலுகைகளை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஏற்கெனவே ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனாவை எதிர்கொள்ள அறிவிக்கப்பட்ட சலுகைகள் இந்தாண்டு பட்ஜெட்டில் இடம்பெறும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.