எகிறியது தங்கம் விலை மட்டுமில்லை! நகைக்கடை பங்குகளும்தான்! காரணம் பட்ஜெட்டிலிருந்த அந்த ஒரு பாயிண்டு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பட்ஜெட் நாளான இன்று தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. அதேநேரம் இன்று தங்கம் விலை மட்டுமின்றி தங்க நகைக் கடைகளின் பங்குகள் விலையும் அதிகரித்துள்ளன. இதற்கு என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இன்று காலை 11 மணியளவில் அவர் நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையை வாசித்தார்.

சரியாக 1 மணி நேரம் 14 நிமிடம் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வாசித்தார். அவரது முழு பட்ஜெட் உரைகளிலேயே இதுதான் குறுகிய நேரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை:
மத்திய பட்ஜெட் நாளான இன்று தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது. பட்ஜெட்டிற்கு முன்பே 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருந்தது. இதற்கிடையே பட்ஜெட்டிற்கு பிறகு 2வது முறையாகச் சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. இப்போது சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.62,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,790க்கு விற்பனையாகிறது.
தங்க நகைக்கடைகள்:
பட்ஜெட் நாளான இன்று தங்கம் விலை மட்டுமின்றி தங்க நகைக்கடைகளின் பங்குகளும் உயர்ந்துள்ளன. முக்கிய நகைக்கடை நிறுவனங்களின் பங்குகள் 9% வரை உயர்ந்துள்ளது. நகைகளுக்கான இறக்குமதி வரி 25%இல் இருந்து 20% ஆகக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் காரணமாக நகைக்கடை நிறுவனங்களின் பங்குகள் 9% bரை உயர்ந்துள்ளது.
பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் பங்குகள் 9.98% உயர்ந்து ரூ.585க்கு சென்றது. சென்கோ கோல்டு பங்குகள் 9.62% உயர்ந்து ரூ.494க்கு வர்த்தகமானது. டைடன் நிறுவனத்தின் பங்குகள் 6.06% உயர்ந்து ரூ. 3572க்கு வர்த்தகமானது. தங்கமயில் நிறுவனத்தின் பங்குகளும் 3.30% உயர்ந்து 1810 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது தவிர கல்யாண் ஜூவல்லர்ஸ், திரிபோவன்தாஸ் பீம்ஜி என்று அனைத்து நகைக் கடைகளின் நிறுவனங்களின் பங்குகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.
வல்லுநர்கள் சொல்வது என்ன:
இது தொடர்பாகப் பிரபல காமா ஜூவல்லரியின் இயக்குநர் கொலின் ஷா கூறுகையில், "நகைகள் மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இந்தியாவில் எப்போதும் மக்கள் அதிகளவில் நகைகளை வாங்குவார்கள். வரிகள் இப்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில், இது தேவையை நிச்சயம் அதிகரிக்கும். நகை வாங்குவோருக்கு இது நல்ல விஷயம் தான். அதேபோல், பிளாட்டினம் மீதான வரியை 5%ஆகக் குறைத்துள்ளதும் வரவேற்கத்தக்க நடவடிக்கை" என்றார்.

இந்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் மட்டுமின்றி வைர வியாபாரிகளுக்கும் நல்ல செய்தி இருந்தது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரத்தின் விதைகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் காலங்களில் வைரத்தின் விற்பனையும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி:
இது தவிர மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக மிக முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் வருமான வரியில் புதிய முறையில் இருப்போருக்கு ரூ. 12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவைப்படாது. மேலும், பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை முதலீட்டு ஆலோசனையாக நிச்சயம் கருதக்கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு முதலீட்டு ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.












Click it and Unblock the Notifications