பெண்களுக்கான திருமண வயது 18ல் இருந்து 21ஆக அதிகரிப்பு...மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி : இந்தியாவில் பெண்களுக்கு திருமண வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தலாம் என ஏற்கனவே ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருந்தது
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
ஆண்களைப் போல பெண்களுக்கும் இனி திருமண வயது 21... மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பெண்கள் திருமண வயது 21
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு புதன்கிழமையன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி உரையாற்றிய ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்தத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தும் திட்டம் குறித்து கடந்த ஆண்டு சுதந்திரதின உரையின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியிருந்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "நம்முடைய அரசாங்கம் மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற, பெண்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்," என கூறியிருந்தார்.
நிதி ஆயோக் பரிந்துரை
தற்போது, ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் உள்ளது. இந்நிலையில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் சார்பில் ஒரு குழு அமைக்ப்பட்டது. இந்த குழுவில் மத்திய சுகாதாரத்துறை உயர்மட்ட நிபுணர் வி.கே.பால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். இந்த குழு பெண்கள் மற்றும் குழந்தைகளின் தற்போதைய திருமண வயது, குழந்தைகளின் பிறக்கும்போது பெண்ணின் வயது, ஆரோக்கியம், ஆரோக்கியமின்றி குழந்தைகள் இறப்பு போன்ற தரவுகளின் அடிப்படையில் ஆலோசனை மேற்கொண்டது.
21 வயதே கர்ப்பமாக சரியான வயது
இதை அடுத்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்த பரிந்துரையில் ஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கான வயது குறைந்தபட்சம் 21ஆக இருப்பது உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் என அந்த குழு டிசம்பர் மாதம் பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தது. மேலும் பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும். அதே சமயத்தில் குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு புதன்கிழமையன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குழந்தைகள் இறப்பு விகிதம்
2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த ஒரு வயதுக்கு உட்பட்ட 1,000 குழந்தைகளில் 35 பேர் இறந்துள்ளனர், 2015-16 இல் 1,000 உயிருள்ள பிரசவத்தில், 41 குழந்தை இறப்புகள் என்பதை விட 15% குறைவு என்று சமீபத்திய சுகாதாரத் தரவு காட்டுகிறது. இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் உத்தரப் பிரதேசத்தில் 1,000 பிறப்புகளுக்கு 50 குழந்தை இறக்கின்றன. பீகாரில் 47, சத்தீஸ்கரில் 44, மத்தியப் பிரதேசத்தில் 41 ஆக உள்ளன.