அப்பார்ட்மெண்ட்களில் ஒரு தளத்திலிருந்து மற்ற தளங்களுக்கு பரவும் கொரோனா? புதிய ஆய்வுகள் கூறுவது என்ன
டெல்லி: நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் அப்பார்ட்மெண்ட்டில் கீழ் தளத்திலிருந்து கொரோனா வைரஸ் மேற்தளத்திற்குப் பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் 4000ஐ தாண்டியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட, கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. அதேபோல கொரோனா பாதிப்பு குறித்தும் மக்களிடையே பல சந்தேகங்களும் எழுந்துள்ளன.

கீழ் தளத்திலிருந்து மேல் தளங்களுக்குப் பரவுமா
இந்நிலையில், பெங்களூரு லால் பகதூர் சாஸ்திரி நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவருக்குக் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அடுத்து 10 முதல் 12 நாட்களுக்கு அவர் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இருப்பினும், அப்பார்ட்மெண்டில் அவரது வீட்டின் மேற்தளத்தில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த நிகழ்வு, அப்பார்ட்மெண்டில் கீழ் தளத்திலிருந்து கொரோனா வைரஸ் மேற்தளத்திற்குப் பரவுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சார்ஸ் தொற்று
இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன்னர், இது குறித்து சர்வதேச அளவில் நடந்துள்ள ஆய்வுகள் சிலவற்றின் முடிவுகளை நாம் பார்க்கலாம். 2002ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று ஏற்பட்ட போதே இந்த கேள்விகள் அனைவருக்கு மத்தியிலும் எழுந்தது. சார்ஸ் தொற்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கீழ் தளத்திலிருந்து, மேலே உள்ள தளங்களுக்குப் பரவும் என்பது ஆய்வுகளில் தெரியவந்தது.

சார்ஸ் ஆய்வுகள்
அதாவது அப்பார்ட்மெண்டில் கீழே உள்ள குடியிருப்புகளுக்கும் மேலே உள்ள குடியிருப்புகளுக்கும் அருகிலேயே ஜன்னல்கள் அமைந்திருக்கும். இதன் மூலம் கொரோனா மேற்தளங்களுக்கும், அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பரவலாம் என அந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சார்ஸ் வைரஸ் குறித்து நடத்தப்பட்ட ஆய்வாகும்.

சீனாவில் ஆய்வுகள்
இதேபோல கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கொரோனா வைரஸ் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பரவுமா என்பது குறித்து சீனாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. வூஹானில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்தின் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் யாரும் நேரடியாகத் தொடர்பில் இருக்கவில்லை. இருந்தாலும் கொரோனா பரவியுள்ளது.

கொரோனா பரவல்
முதலில் லிப்ட் உள்ளிட்டவை மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்தனர். ஆனால், லிப்டுகளின் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒரு முக்கியமான விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் குழாய்கள் ஒன்று தான் இருக்கும். அனைத்து வீடுகளுக்கும் இந்த குழாயிலிருந்து தான் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

நிச்சயமற்ற முடிவுகள்
மேலும், சில ஆராய்ச்சிகளில் ஏசி, காற்றோட்டத்திற்கு இருக்கும் ஜன்னல் ஆகியவை மூலமும் கொரோனா பரவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சில ஆய்வுகள் இதை முற்றிலுமாக மறுத்துள்ளன. அதாவது ஏசி மற்றும் லிப்ட் போன்றவை மூலம் கொரோனா ஒரு தளத்திலிருந்து மற்ற தளங்களுக்குப் பரவுமா என எந்த ஆய்வுகளிலும் உறுதியாகக் கூறவில்லை. இந்த ஆராய்ச்சிகள் மூலம் அப்பார்ட்மெண்டில் கீழ் தளத்திலிருந்து கொரோனா வைரஸ் மேற்தளத்திற்குப் பரவுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

பரவுவது உறுதி
அதாவது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கீழே உள்ள ஒரு தளத்திலிருந்து மேலே இருக்கும் தளங்களுக்கு கொரோனா பரவல் ஏற்படும் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த மார்ச் மாதம் மும்பை பெருநகரில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் சுமார் 90% அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏற்பட்டவை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications