டிராக்டர் பேரணி...குடியரசு தின விழாவை சீர்குலைக்க கூடாது- விவசாயிகளுக்கு போலீஸ் நிபந்தனை
டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் போது குடியரசு தின விழாவை சீர்குலைக்கக் கூடாது என விவசாயிகளுக்கு போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2 மாத காலமாக கடும் குளிரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த பலனும் ஏற்படவில்லை.
இதில் தலையிட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின நாளில் 1 லட்சம் டிராக்டர்களை கொண்டு டெல்லியில் பேரணி நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இதற்காக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீஸ்தான் முடிவெடுக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியது.
இதனைத் தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிவியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை அமைதியாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் டெல்லி போலீசார் விதித்துள்ளது.
அதில், டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையலாம். ஆனால் குடியரசு தின விழா அணிவகுப்பை சீர்குலைக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications