மினிமம் பேலன்ஸுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை ரத்து! கனரா வங்கி அதிரடி அறிவிப்பு
டெல்லி: நிதி சேவையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கவும், வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், இன்று முதல் தங்களது வங்கியில் மினிமம் பேலன்ஸுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை ரத்து செய்வதாக கனரா வங்கி அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "வங்கியின் புதிய கொள்கை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் செய்ய வேண்டும் என்று எந்த விதிமுறையும் பின்பற்றப்படாது. இதனால் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி அபராதமும் விதிக்கப்படாது. அனைத்து வகை சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் இது பொருந்தும். சுதந்திரத்தை உணருங்கள், வித்தியாசத்தை உணருங்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம், மினிமம் பேலன்ஸுக்கான அபராதம் ரத்தை அறிவிக்கும் முதல் பொதுத்தறை வங்கியாக கனரா வங்கி மாறியிருக்கிறது.
இதற்கு முன்னர், இந்த வங்கியின் நகர்ப்புற கிளையில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.2,000, இரண்டாம் தர நகர்ப்புற வங்கியில் அக்கவுன்ட் வைத்திரப்பவர்கள் ரூ.1,000, கிராமப்புற கிளையில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் ரூ.500 என குறைந்தபட்ச பேலன்ஸ் தொகையை மெயின்டெயின் செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்கிற நடைமுறையை கனரா வங்கி பின்பற்றி வந்திருந்தது.
வங்கியின் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை கட்டாயம் மெயின்டெயின் செய்ய வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அப்படி பின்பற்றாத வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையும் விதிக்கப்பட்டும் வருகிறது. இது சாமானிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உதாரணமாக ஒரு இளைஞர் படித்து முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார் எனில், அந்நிறுவனம் சார்பில் ஊழியரான இளைஞருக்கு வங்கி கணக்கை தொடங்குகிறது.
ஆனால் வேலை பிடிக்கவில்லை, சம்பளம் போதவில்லை என பல காரணங்களுக்காக, அந்த இளைஞர் ஓரிரு மாதங்களுக்கு பிறகு, வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு போகிறார் எனில், இரண்டாவது நிறுவனம் எந்த வங்கியுடன் இணைந்து செயல்படுகிறதோ, அந்த வங்கியில் புதிய கணக்கு தொடங்கப்படும். முதலில் கணக்கு தொடங்கப்பட்ட வங்கியும், அடுத்த நிறுவனத்தில் கணக்கு தொடங்கப்பட்ட வங்கியும், வேறு வேறாக இருப்பதால், ஏதேனும் ஒரு வங்கி கணக்கை மட்டுமே தொடர வேண்டிய நிலை இருக்கும்.
இதனால் முதலில் தொடங்கப்பட்ட வங்கியில் மினிமம் பேலன்ஸை மெயின்டெயின் செய்ய முடியாது. இதனால் அந்த வங்கி அபராதம் விதிக்கும். வங்கி கணக்கை நிரந்தரமாக ரத்து செய்ய முயன்றாலும் இந்த அபராதத்தை கட்டினால்தான் அதை செய்ய முடியும். அபராதம் கட்டவில்லை எனில், அபராதம் மேலும் உயர்ந்துக்கொண்டே வரும். இது பலருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வந்தது.
இது தவிர முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை பெறவும் வங்கி கணக்கு முக்கியம். வங்கியில் வரும் தொகையை எடுத்துதான் சாமானிய மக்கள் அன்றாட தேவையை ஈடுசெய்கின்றனர். ஆனால் இந்த தொகையை எடுத்துவிட்டால் மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் செய்யவில்லை என்று வங்கி அபராதம் போடுகிறது. அடுத்த முறை உதவி தொகை வரும்போது அதில் இந்த அபராத தொகை கழிக்கப்படுகிறது.
இதனால் சாமானிய மக்களுக்கு வங்கி சேவை தலைவலியாக உருவாகியுள்ளது. இது பற்றி புகார்கள், விமர்சனங்கள் பல எழுந்த நிலையில் தற்போது கனரா வங்கி மினிமம் பேலன்ஸுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை நீக்கியுள்ளது.
கனரா வங்கியின் இந்த அறிவிப்பு, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, சாமானிய மக்கள் பலரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications