இது அத்தியாவசிய பணி.. சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமானத்திற்கு தடை விதிக்க முடியாது.. டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அத்தியாவசிய பணி என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது.
டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது மக்கள் இடையே எதிர்ப்பு அலையை சந்தித்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாத போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் கட்ட இவ்வளவு கோடியை செலவு செய்வது விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த கட்டுமானத்தை அத்தியாவசிய தேவை என்று கூறி கொரோனா லாக்டவுனிலும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

வழக்கு
இந்த நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான கட்டுமானத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அன்யா மல்ஹோத்ரா, சொஹைல் ஹாஸ்மி என்ற இரண்டு பேர் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.

மனு
இந்த வழக்கில் வாதம் வைத்த மனுதாரர் தரப்பு, கொரோனா காலத்தில் இப்படி சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமானத்தை மேற்கொள்வது தவறு. இது அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அங்கே குடியிருக்கும் மக்களுக்கும் இது ஆபத்தை விளைவிக்கும். அங்கே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை.

உணவு இருப்பிடம்
யாருக்கும் சரியான உணவு இருப்பிடம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு டென்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இப்படி கட்டுமான பணிகளை தொடர்வது ஆபத்தானது. இது ஜெர்மனில் ஹிட்லர் கட்டிய ஆஸ்டவிச் கேம்ப் போல கொடுமையான ஒன்று என்று குறிப்பிட்டு இருந்தனர். இதை மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடுமையாக ஆட்சேபித்தார்.

தவறு
சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இவர்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். கொரோனாவிற்கு முன்பில் இருந்தே இந்த திட்டத்தை நிறுத்தும் முனைப்பில்தான் இவர்கள் இருந்தனர். ஊழியர்களின் பாதுகாப்பு எல்லாம் இவர்களின் கவலை கிடையாது. இந்த திட்டம் நிறைவேற கூடாது என்பதே இவர்களின் நோக்கம்.

ஹிட்லர்
ஹிட்லர் கட்டிய ஆஸ்டவிச் கேம்ப்புடன் இதை ஒப்பிடுவது மிக தவறு என்று என்றது துஷார் மேத்தா குறிப்பிட்டார். அதோடு இந்த கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஷாபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனமும், ஊழியர்கள் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். முறையான பாதுகாப்போடுதான் இந்த பணிகள் நடக்கின்றன என்று வாதம் வைத்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் இன்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தடை முடியாது
அதில் மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது, இது அத்தியாவசிய பணி, அதனால் பணிகள் தொடர்ந்து நடக்கலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதோடு இந்த மனு நேர விரயம், உள்நோக்கத்தோடு போடப்பட்ட மனு என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. மேலும் மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications