"இன்று விஜய் முதல்வராக பதவியேற்க ஸ்டாலின் தான் காரணம்!" பின்னணியில் நடந்த "மெகா" அரசியல்! திமுக பரபர
சென்னை: தமிழ்நாடு முதல்வராக இன்று விஜய் பதவியேற்கிறார். இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக திமுக- அதிமுகவை சேராத ஒருவர் முதல்வராகப் பதவியேற்கிறார். இதற்கிடையே விஜய் முதல்வராக ஸ்டாலினின் பெருந்தன்மையே காரணம் என்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஸ்டாலின் பேசிய பிறகே விஜய்யால் பெரும்பான்மையை அடைய முடிந்ததாக திமுகவின் சரவணன் கூறியிருக்கிறார்.
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனை அரசியலை உடைத்து, இன்று (மே 10) புதிய வரலாறு படைக்கிறார் விஜய். ஒரு வாரக் காலமாக நீடித்து வந்த 'நம்பர் கேம்' சஸ்பென்ஸ் ஒருவழியாக முடிவுக்கு வந்து, 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் கோட்டையில் அரியணை ஏறுகிறார் சி. ஜோசப் விஜய்.

முதல்வராகும் விஜய்
இன்று காலை 10 மணிக்குச் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய். நேற்று இரவு தான் இந்த இழுபறிக்கு ஒருவழியாக முடிவு கிடைத்தது.
- தவெக பலம்: 108 இடங்கள் - விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் 107
- கூட்டணி பலம்: காங்கிரஸ் 5
- வெளியில் இருந்து ஆதரவு: சிபிஐ (2) + சிபிஎம் (2) + விசிக (2)+ ஐயுஎம்எல் (2) = 120
கடைசி நேரத்தில் விசிக, ஐயுஎம்எல் ஆதரவு கொடுக்கவே இதன் மூலம் விஜய்யின் பலம் 120-ஆக உயர்ந்து, மெஜாரிட்டி மார்க்கான 118-ஐத் தாண்டியது.
காரணம் ஸ்டாலின்
இதற்கிடையே விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதன் பின்னணியில், மு.க. ஸ்டாலின் இருப்பதாக திமுக தரப்பு கூறுகிறது. இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் கூறுகையில், "தமிழகத்தில் ஒரு அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதில் எங்கள் தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதனால் தான், தனது கூட்டணிக் கட்சிகளிடம் விரிவாகப் பேசி, அவர்களை விஜய்க்கு ஆதரவு அளிக்க அவர் சம்மதிக்க வைத்தார்" என்றார்.
காங்கிரஸ் மீது தாக்கு
மற்ற கட்சிகளுக்கு முன்பே திமுக கூட்டணியிலிருந்து விலகி முதலில் விஜய்க்கு ஆதரவு தந்தது காங்கிரஸ் தான். காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்த சரவணன், "காங்கிரஸ் வென்ற அந்த 5 இடங்களும் திமுக தொண்டர்களின் உழைப்பால் கிடைத்தது" எனச் சாடியுள்ளார்.
அதாவது தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே விஜய்க்குத் தேடிச் சென்று ஆதரவைக் கொடுத்தது காங்கிரஸ். அந்த நிலைப்பாட்டைத் தான் திமுக சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதேநேரம் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ள இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் திமுகவின் கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதரவு அளிப்பதாகச் சொல்கிறார் சரவணன்.!
60 ஆண்டுகளில் முதல்முறை
1967க்குப் பிறகு, அதாவது சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அல்லது அதிமுக அல்லாத ஒரு கட்சியின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையப் போகிறது. விசிக உள்ளிட்ட கட்சிகள் 'வெளியிலிருந்து ஆதரவு' தரப்போகின்றன. இருப்பினும், அதிகாரப் பகிர்வு குறித்து விஜய் வெளிப்படையாக இருப்பதால், இந்த கூட்டணி ஆட்சியில் காங்கிரஸும் இருக்கும் எனத் தெரிகிறது.
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் விஜய்க்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மேலும், வரும் மே 13ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார்..












Click it and Unblock the Notifications