தண்ணீர் திறக்க மறுப்பு! காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வெளிநடப்பு! டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற அரசு அதிகாரிகள் திடீரென்று வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் பிரச்சனைகள் இருந்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சார்பில் அவ்வப்போது கூட்டங்கள் கூட்டப்படும்.

இதில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்பார்கள். அதன்படி டெல்லியில் இன்று 22வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்துக்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.
சமீபகாலமாக காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு சரியாக தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரியில் தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ெஷகாவத்துக்கு கடிதம் எழுதினார். அதேபோல் நீர்பாசனத்துறை அமைச்சர் துரை முருகனுக்கு டெல்லியில் 2 முறை கஜேந்திர சிங் ெஷகாவத்தை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு சார்பில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் தான் இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரி நீர் தொடர்பான அம்சம் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் தலைநகர் டெல்லியில் தொடங்கியது. இதில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் அதனை கர்நாடகா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுபற்றி தமிழக நீர்வளத்துறையின் கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா கூறுகையில், ‛‛தமிழகத்துக்கு கடந்த 9ம் தேதி வரை 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டி உள்ளதாக வலியுறுத்தினோம். மேலும் அந்த தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கை ஏற்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications