கொல்கத்தா கமிஷனருக்கு எதிராக சிபிஐ வழக்கு.. நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
Recommended Video
டெல்லி: நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
சாரதா நிதி நிறுவனம் மற்றும் தி ரோஸ்வேலி ஊழல் தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் நேற்று இரவு அவரது வீட்டுக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கைது செய்தது.
தர்னா
மாநில அரசின் அனுமதி இல்லாமல் கொல்கத்தா கமிஷனரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எம்எல்ஏ, எம்பிக்கள் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிபிஐ
தங்களை பணி செய்யவிடாததையும் சிபிஐ அதிகாரிகளை போலீஸார் கைது செய்ததையும் கண்டித்து இன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில் சாரதா நிதி நிறுவன வழக்கை விசாரிக்கும் படி உச்சநீதிமன்றம் சிபிஐக்குதான் உத்தரவிட்டது.
ஆதாரங்கள்
ஆனால் இந்த உத்தரவுக்கு முன்பே ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை மம்தா அரசு அமைத்தது. இந்த நிலையில் வழக்கு தொடர்பான ஆதாரங்களை ராஜீவ்குமார் தலைமையிலான குழு திரட்டியுள்ளது. ஆனால் அவற்றை முறைப்படி எங்களிடம் ஒப்படைக்காமல் ஆதாரங்களை அழிக்க பார்க்கின்றனர்.
சிபிஐ வழக்கு
எனவே நிதி நிறுவன மோசடி வழக்கில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விசாரணைக்கு சென்ற 15 அதிகாரிகளை மாநில போலீஸார் சிறை பிடித்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
நாளை விசாரணை
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் என்ன காரணத்திற்காக ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றீர்கள். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. நாளை இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். காவல் துறை ஆணையருக்கு எதிரான ஆதாரங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.