நாரதா லஞ்ச ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ.க்கு பின்னடைவு.. ஹைகோர்ட்டுக்கு எதிரான மனு வாபஸ்
டெல்லி: நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ வாபஸ் பெற்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாரதா என்ற செய்தி இணையதளம் செய்திகளை வெளியிட்டிருந்தது.
போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக செயல்பட ஆளும் திரிணமூல் காங்கிரஸின் 7 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் லஞ்சம் பெற்றது அம்பலமானது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சட்டர்ஜி ஆகிய 4 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த 4 பேருக்கும் சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் அளித்தது.ஆனால் இதனை ரத்து செய்து உத்தரவிட்ட கொல்கத்தா உய்ரநீதிமன்றம், 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இதனை மறுபரிசீலனை செய்யும்படி 4 பேரும் கொல்கத்தா உய்ரநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 4 பேரையும் வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவு சட்டம் ஒழுங்கு குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது என்று சி.பி.ஐ சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். இதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் ஷரன் மற்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் ''இந்த விஷயத்தை உயர் நீதிமன்றம் கவனித்து வருகிறத. அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை அங்கேயே முன்வைத்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் நாங்கள் அதில் தலையிட மாட்டோம். சுதந்திரத்தைப் பாதுகாக்க சிறப்பு பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது' என்றும் கூறினார்கள். இதனை தொடர்ந்து கொல்கத்த்தா உயர்நீதிமன்றத்துக்கு எதிரான தனது வழக்கை சி.பி.ஐ வாபஸ் பெற்றது.