தலைமை தளபதி மரணத்திற்கு எப்படி மகிழ்வீர்கள்? இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறிய இயக்குநர் அலி அக்பர்
டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்த செய்திக்குச் சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கு மலையாள இயக்குநர் அலி அக்பர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.
கடந்த டிசம்பர் சூலூர் ஏர்ஃபோர்ஸில் இருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விபத்தில் சிக்கியது.
குன்னூர் அருகே நடந்த இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்தனர்.

பிபின் ராவத்
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததற்குச் சர்வதேச தலைவர்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல இந்தியாவிலும் பலரும் பிபின் ராவத் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் முப்படை தளபதி மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளுக்குச் சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் அலி அக்பர்
பிபின் ராவத் மரணச் செய்திக்குக் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்வது போன்ற கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல மலையாள இயக்குநர் அலி அக்பர் இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். தனது பெயரை ராமசிம்ஹா என மாற்றிக் கொள்வதாகவும் ஒரு போதும் தன்னால் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்,

இஸ்லமில் இருந்து வெளியேற்றம்
இது தொடர்பா இயக்குநர் அலி அக்பர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறி, இந்து மதத்திற்கு மாறுகிறேன். எனது பெயரையும் ராமசிம்ஹா என்று மாற்றிக் கொண்டுள்ளேன். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம் தொடர்பான மகிழ்ச்சி ஸ்மைலியை பதிவிட்டவர்களுக்கு எதிரான போராட்டம் இது. மதத் தலைவர்கள் ஏன் அவர்களைத் திருத்த முயலவில்லை.

தேச விரோதிகளுடன் நிற்க முடியாது
எனது மனைவியும் இஸ்லாத்தைக் கைவிட்டுள்ளார். இன்று முதல் நான் முஸ்லிம் இல்லை. நான் முதலில் ஒரு இந்தியன். தேச விரோதிகளுடன் என்னால் இனி நிற்க முடியாது, எனது மகள்களை இந்த விவகாரத்தில் நான் நிர்ப்பந்திக்க விரும்பவில்லை. அது அவர்களின் உரிமை " என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications