கடந்த 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை.. மகாராஷ்டிராவில் நிலைமை மோசம்.. தமிழகத்தில் என்ன நிலை
டெல்லி: நாடு முழுவதும் கடந்தாண்டு மட்டும் 5,579 விவசாயிகள் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். குறிக்காக, மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 7486 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 12 ராஜ்ய சபா உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இந்த முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

17299 விவசாயிகள் தற்கொலை
இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலை குறித்தும் விவசாயிகள் எதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார்கள் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்திருந்தது. அதில் 2018 முதல் 3 ஆண்டுகளில் மொத்தம் 17299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில்
இதில் கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5763 விவசாயிகள் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். அதேபோல 2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 5957 விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட கடந்த 2020ஆம் ஆண்டு 5579 விவயாசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா தான் மோசம்
மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிகபட்ச விவசாயிகள் தற்கொலை பதிவாகியுள்ளது. அங்கு 2018இல் 2239 விவசாயிகளும், 2019இல் 2680 விவசாயிகளும், 2020இல் 2567 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மகாராஷ்டிராவில் 7,486 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மற்ற மாநிலங்கள்
அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அதிக விவசாய தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2020ஆம் ஆண்டு 1072 விவசாயிகள் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். அதேபோல அருணாச்சல பிரதேசத்தில் 564 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தெலங்காவில் 466 விவசாயிகள், சத்தீஸ்கரில் 227 விவசாயிகள். பஞ்சாபில் 174 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தலா 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 79 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென ஏற்படும் புயல்கள், பருவமழை பொய்து பொய்து போவது, வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பால் கொட்டித்தீர்க்கும் மழை ஆகியவை விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக மத்திய அரசு கூறுகிறது.












Click it and Unblock the Notifications