அக்னிபாத் வீரர்களுக்கு.. விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை! பல சலுகைகளை அறிவிக்கும் மத்திய அரசு
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ராணுவத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்ய சில நாட்களுக்கு முன்பு, அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணிபுரியலாம்.
அதன் பின்னர் அவர்களில் 25% பேரால் மட்டுமே ராணுவத்தில் தொடர்வார்கள். மற்றவர்கள் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்
மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பீகாரில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் ரயில் எரிப்பு சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. வடமாநிலங்களில் மட்டும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது.

பாதுகாப்பு துறை
இந்தச் சூழலில் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 10% பணியிடங்கள் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியக் கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் சிவிலியன் பதவிகளும் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும். இது தவிரப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்த 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு
ஏற்கனவே அமலில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இந்த புதிய ஒதுக்கீடு புதிதாகக் கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இதற்கு ஏற்ப விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெற்று திரும்புவதால் அதற்கேற்ப தேவையான வயது தளர்வும் அவர்களுக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்துத் துறை
இதேபோல மற்றொரு அறிவிப்பை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது அக்னிபாத் வீரர்களுக்கு சிவில் விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட அக்னி வீரர்களுக்கு விமான போக்குவரத்து துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அத்துறையின் அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா அறிவித்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications