அமேசானுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு..மீஷோ, ப்ளிப்கார்ட்டும் தப்பலையே! வாக்கி-டாக்கியால் வந்த சிக்கல்
டெல்லி: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 மற்றும் தொலைத்தொடர்பு சட்ட விதிகளை மீறி, அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கி மற்றும் ரேடியோ தொடர்பு சாதனங்களை ஆன்லைன் தளங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக, மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) எட்டு நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் ரூ.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக ஜியோமார்ட், சிமியா, டாக் ப்ரோ, மீஷோ, மாஸ்க்மேன் டாய்ஸ், டிரேட்இந்தியா, அன்ட்ரிக்ஷ் டெக்னாலஜிஸ், வர்தான்மார்ட், இந்தியாமார்ட், மெட்டா (பேஸ்புக்), பிளிப்கார்ட், கிருஷ்ணா மார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட 13 ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த தளங்களில் மொத்தம் 16,970-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கி மற்றும் ரேடியோ சாதனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காக மீஷோ, மெட்டா, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதமும், சிமியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ மற்றும் மாஸ்க்மேன் டாய்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார்.
இதில் மீஷோ, மெட்டா, சிமியா, ஜியோமார்ட் மற்றும் டாக் ப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கான அபராதத் தொகையை ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இன்னும் அபராதத்தைச் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாக்கி-டாக்கி மற்றும் ரேடியோ தொடர்பு சாதனங்களை விற்பனை செய்ய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) உரிய அனுமதி மற்றும் உரிமம் அவசியம். ஆனால், ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களில் அங்கீகாரம் பெறாத சாதனங்கள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, காவல்துறை மற்றும் அவசரகால சேவைகள் பயன்படுத்தும் UHF அலைவரிசைகளில் இந்தச் சாதனங்கள் குறுக்கீடுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சினையாகவும் கருதப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் வணிகத் தளங்களில் வாக்கி-டாக்கி உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை சட்டவிரோதமாக பட்டியலிடுவதையும் விற்பனை செய்வதையும் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு CCPA விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளின் படி, இனிவரும் காலங்களில் இ-காமர்ஸ் தளங்கள் எந்த தொலைத்தொடர்பு சாதனத்தையும் விற்பனைக்கு முன், அதற்கு உரிய அரசின் அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா என்பதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications