பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடிகள்- என்.ஐ.ஏ. விசாரணை தேவை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ NIA) அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் எப்போதுவேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிரதமர் மோடி பயணம்
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலிதளம், பாஜக, முன்னாள் முதல்வர் அமரீந்த்ர்சிங்கின் லோக் காங்கிரஸ் ஆகியவை தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடியும் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்ட்டிருந்தார். பிரதமர் மோடி காரில் பயணம் செய்த போது விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் மோடியின் வாகனம் சுமார் 20 நிமிடம் காத்திருந்தது.

பஞ்சாப் நிகழ்ச்சிகள் ரத்து
பின்னர் பஞ்சாப் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக தாம் உயிருடன் திரும்பியதாக உங்கள் முதல்வரிடம் சொல்லுங்கள் என பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.

மத்திய அரசு விசாரணை
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்தானது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்கிறது. அத்துடன் மூவர் குழு ஒன்றையும் உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
இதனிடையே பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மன்விந்தர்சிங் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச்சில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். மேலும் இத்தகைய குளறுபடிகள் திட்டமிட்டு நடந்துள்ளது; எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் மன்விந்தர்சிங் வலியுறுத்தினார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ. விசாரணை தேவை
இன்றைய விசாரணையின் போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் உதவியுடன் விசாரிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். மேலும் பஞ்சாப் போலீசார் பிரதமர் மோடியின் சாலையை மறித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுடன் சேர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர்; பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலான குளறுபடிகள் குறித்து பஞ்சாப் மாநில அரசு விசாரணை நடத்த முடியாது என்றும் துஷார் மேத்தா வாதிட்டார். முன்னதாக பஞ்சாப் மாநில அரசு இது தொடர்பாக விசாரிக்க கூடாது என மூத்த வழக்கறிஞரும் மனுதாரருமான மன்விந்தர்சிங் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications