தினமும் 30,000 கேஸ்கள்.. கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கணும்.. கேரளாவுக்கு மத்திய அரசு அட்வைஸ்!
டெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வரும் வரும் நிலையில் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை கொடுக்கின்றன. மற்ற மாநிலங்கள் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், கேரளாவோ கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம்? என யோசனை செய்து வருகிறது.

கொரோனா பிடியில் கேரளா
இன்று மட்டும் கேரளாவில் 32,801 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. கொரோனாவுக்கு மேலும் 179 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 20,313 ஆக இருக்கிறது. கொரோனாவுக்கு 1,95,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதாவது தற்போது நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பில் சுமார் 50 சதவீத பாதிப்புகள் கேரளாவில் மட்டுமே எற்பட்டு வருகின்றன.

சிதைந்த கேரள மாடல்
கொரோனா முதல் அலையில் சிறப்பாக நவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக பல்வேறு பாராட்டுகளை பெற்றது கேரளா. 'கேரள மாடல்' என்று ஐ.நா.வும் பாராட்டியது. நெட்டிசன்களும் பாராட்டு புகழ் மழை பொழிந்தது. ஆனால் தற்போது அந்த கேரளா மாடல் என்ற ஒன்றையே அடித்து சென்று விட்டது கொரோனா வைரஸ்.

பாஸிடிவ் ரேட் மிக அதிகம்
கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிடிவ் ரேட்) தொடர்ந்து 19 சதவீதத்துக்கு மேல் இருப்பதால் கேரளாவில் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. அதுவும் கடந்த வாரம் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் அங்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன. மக்களும் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை. இதனால் பாதிப்பு தற்போது அதிவேகம் எடுத்துள்ளது. கேரளா கொரோனா மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு அட்வைஸ்
சமீபத்தில் கேரளாவில் ஆய்வு செய்த மத்திய குழுவினரும் கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றவில்லை என்று கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கேரளா மற்றும் மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கட்டுப்பாடுகளை கடைபிடிக்கணும்
அதில்' கேரளாவில் கொரோனா உள்ள பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாநில மக்களுக்கு விரைந்து தடுப்பூசிகள் போட வேண்டும். தொற்று ஏற்பட்டவர்களை உடனடியாக கண்காணித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மகாராஷ்டிராவை பொறுத்தளவில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications