''மருத்துவ ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யவில்லை.. தவறான தகவல் பரப்ப வேண்டாம்''.. மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்த நிலையில் மத்திய அரசு இதனை மறுத்துள்ளது.
தொழில்துறை ஆக்ஸிஜன் ஏற்றுமதி மருத்துவ ஆக்ஸிஜன் என்று தவறாக கருதப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கொடூரமாக போட்டு தாக்கி வருகிறது. நாடு முழுவதும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி... பாஜக அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் -காங்கிரஸ்
படுக்கைகள் இல்லை
கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி விட்டன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரும்பலான மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்றும் குற்றச்சாட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சை மிகவும் அவசியமாகும்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
ஆனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. போபாலில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 6 பேர் இறந்ததாகவும், மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒரே நாளில் 7 பேர் பலியாகி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
டெல்லியில் மிக மோசம்
மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ''தங்களிடம் போதுமான ஆக்சிஜன் இல்லை. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை விபரீதமாகி விடும்'' என்று டெல்லி மத்திய அரசிடம் நேரடியாக கூறியது.
ஏற்றுமதி செய்ததால் தட்டுப்பாடு
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் தட்டுப்பாடு ஏற்படும் மாநிலங்களில் ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஒரு புறமிருக்க கொரோனா காலத்தில் மத்திய அரசு மருத்துவ துறை சார்ந்த ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால் தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
தவறான தகவலை பரப்ப வேண்டாம்
இந்த நிலையில் 2020-21 ஆம் ஆண்டு தொற்று நோய் காலத்தில் இந்தியா மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்ததாக தீங்கிழைக்கும் பிரச்சாரம் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது என்றும் தொழில்துறை ஆக்ஸிஜன் ஏற்றுமதி மருத்துவ ஆக்ஸிஜன் என்று தவறாக கருதப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.