வெறும் 4% மக்களுக்கு தேவையான.. தடுப்பூசிக்கு மட்டும் ஆர்டர் அளித்துள்ள மத்திய அரசு.. அதிர்ச்சி தகவல்
டெல்லி: 140 கோடியைக் கொண்ட இந்தியாவில், வெறும் 4% மக்களுக்குத் தேவையான தடுப்பூசியை மட்டுமே மத்திய அரசு சீரம் நிறுவனத்திற்கு ஆர்டர் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா கண்டறிய சிடி ஸ்கேன் வேண்டாம்.. கேன்சர் ஏற்படும் அபாயம் உள்ளது.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை
இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு
மே 1ஆம் தேதி முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாட்டில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மாநில அரசுகளும் தங்களிடம் போதியளவு தடுப்பூசி இல்லை என்றே தெரிவித்துள்ளனர். இதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது.
வெறும் 4%
இந்நிலையில், மத்திய அரசு சீரம் நிறுவனத்திடம் வெறும் 11 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஆர்டர் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு இரண்டு டோஸ் விகிதத்தில் 5.5 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி அளிக்க முடியும். 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், இது வெறும் 4 சதவிகிதமாகும்.
2 ஆண்டுகள் ஆகலாம்
உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமாக சீரம் நிறுவனத்திற்கு மத்திய மாநில அரசுகள் ஆர்டர் அளித்துள்ளன. இருப்பினும் அந்நிறுவனம், தற்போது மாதத்திற்கு 6 முதல் 7 கோடி தடுப்பூசிகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது. வரும் ஜூலை மாதம் முதல் 10 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யவுள்ளது. இந்த நிலையில் உற்பத்தி இருந்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்த 2 ஆண்டுகள் வரை ஆகும்.
அதிருப்தி
கொரோனா 2ஆம் அலை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை காரணமாக இந்தியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தியா மக்கள்தொகையில் வெறும் 4% மக்களுக்குத் தேவையான தடுப்பூசிக்கு மட்டுமே மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.