மர்மம்.. மனித இனத்தின் வரலாறே தெரிந்துவிடும்.. நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 செல்வது ஏன்?
டெல்லி: பல்வேறு மர்மங்கள் நிறைந்து இருக்கும் நிலவின் தென் துருவத்தை நோக்கி சந்திரயான் 3 செல்வது ஏன் என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. நிலவின் தென் பகுதி ஆராய்ச்சி பல திருப்பங்களை ஏற்படுத்த போகிறது.
நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 திட்டத்தை இந்தியா நாளை அனுப்ப உள்ளது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கி உள்ளது. தற்போது சந்திரயான் 3 திட்டத்தில் சந்திரயான் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளன. இவை நிலவில் களமிறங்கும்.

இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை விண்ணிற்கு அனுப்பும்.
சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார், இருப்பினும் சந்திரனில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்து இது மாறக்கூடும். தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதை இஸ்ரோ மாற்றியமைக்கும்.
தென் துருவம் ஏன்? நிலவின் தென் துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி செய்தது கிடையாது. நிலவில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இதுவரை ரோவரை களமிறக்கி உள்ளது. ஆனால் யாரும் நிலவின் தென் துருவத்திற்கு செல்லவில்லை. முதல்முறையாக நிலவின் தென் துருவத்தை குறி வைத்து தற்போது சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
அங்கு சந்திரயான் 3 தனது ரோவர் பிரக்யானை களமிறக்கி ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. ஆம் விக்ரம் என்ற லேண்டர் மூலம் பிரக்யான் என்று ரோவரை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 களமிறக்கும். இந்த நிலவின் தென் துருவம் எப்போது சுவாரசியமும், பல புதிர்களும் நிறைந்த ஒன்றாகும். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட சிறிய மாற்றமும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
முதலில் நிலவின் முழு தென் பகுதி முழுக்க சூரிய வெளிச்சம் படாமல் இருந்தது. ஆனால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட வைத்தது. நிலவு லேசாக சாய்ந்தது. இதனால் நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. இந்த இடத்தைதான் தற்போது சந்திரயான் 3 ஆராய போகிறது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம்தான் நிலவில் தற்போது நடக்கும் ஆராய்ச்சிக்கு எல்லாம் காரணம். அப்போது ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் நிலவின் அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகியது. இது அங்கு தண்ணீரை உருவாக்கியது.
இதைத்தான் சந்திரயான் 1 கண்டுபிடித்து, நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று கூறியது. இதுவே சந்திரயான் 2 திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது. ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது சந்திரயான் 3 தென் துருவத்தை நோக்கி செல்கிறது. இது அங்கு சூரியன் படும் இடங்களை மட்டுமில்லாமல் சூரியன் படாத இடங்களையும் ஆராய்ச்சி செய்ய உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், சந்திரயான்-2 குறி வைத்த பகுதிக்கு மிக அருகில்தான் இது இறங்கி உள்ளது: சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் 70 டிகிரி அட்சரேகை பகுதியில் இது இறங்கும். எல்லாம் சரியாக நடந்தால், சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கும் உலகின் முதல் ரோவராக மாறும். இந்த தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். இந்த ஐஸ் குவியல்களைத்தான் தற்போது சந்திரயான் 3 வின் பிரக்யான் ரோவர் ஆராய்ச்சி செய்ய உள்ளது.

இந்த ஐஸ் கட்டியை வைத்து அங்கு இருக்கும் தண்ணீர் அளவு, உயிரினம் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது எல்லாம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்படும். அட, இங்கு ஐஸ் கட்டி மட்டுமில்லாமல், நமது சூரிய குடும்பம் உருவான போது ஏற்பட்ட மோதல் காரணமாக நிலவின் தென் துருவத்தில் நிறைய காந்தமும் இருக்கிறது. ஆனால் இது வெளிப்படையாக வெளியே இல்லாமல் காந்த குவியல்களாக நிலவின் அடியில் தென் துருவத்தில் உள்ளது. நிலவின் வட துருவத்தில் இந்த காந்தம் காணப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தென் பகுதி ஆராய்ச்சி மிக முக்கியம் ஆகும். இது இல்லாமல் அதிக அளவு ஹைட்ரஜன் மற்றும் நிலவு உருவான நேரத்தில் அதில் படிந்த பொருட்கள் எல்லாம் இந்த தென் துருவத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய ஒளியே படாத காரணத்தால் நிலவு உருவான நேரத்தில் என்ன எல்லாம் இருந்ததோ அதெல்லாம் அப்படியே இங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்களை ஆராய்ந்தால் உலகம் தோன்றியது எப்படி, மனித இனம் தோன்றியது எப்படி என்று பல கேள்விகளுக்கு கூட பதில் கிடைக்கும் என்கிறார்கள். இந்த இடங்களை எல்லாம் பிரக்யான் 14 நாட்களில் ஆய்வு செய்ய போகிறது.
இதுதான் நிலவின் தென் துருவத்தை இஸ்ரோ குறிவைக்க காரணம். வேறு எந்த ஒரு நாடும் நிலவின் கடைசி தென் முனைக்கு இப்படி ரோவரை அனுப்பியது கிடையாது. முதல்முறையாக இந்தியா அந்த சாதனையை செய்கிறது. இன்னும் சற்று நேரத்தில் நிலவின் தென் பகுதியில் இந்தியாவின் கொடி நாட்டப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications