அடுத்த ஆண்டு முதல் பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் பயணம்.. குட் நியூஸ் சொன்ன நிதின் கட்கரி!
டெல்லி: பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருப்பதி, மாமல்லபுரம் - முகையூர், தர்மபுரி - தொரப்பள்ளி, பொள்ளாச்சி - மடத்துக்குளம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி, மேலூர் - காரைக்குடி, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் - பழனி, திருமங்கலம் - வடுகப்பட்டி சாலை பணிகளும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றார் நிதின் கட்கரி.
ராஜ்யசபாவில் இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த பதில் விவரம்: சென்னை - பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படுமென, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, 61.74% அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்தத் திட்டம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை - பெங்களூரு இடையேயான பயணத் தொலைவு மற்றும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு நான்குவழி உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகள், பல்வேறு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்படும்.
சென்னை - ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை மற்றும் காரைப்பேட்டை - வாலாஜாப்பேட்டை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் பணிகள் 98.5% முடிவடைந்துள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை இடையிலான பணிகள் 56.92% அளவிற்கும் காரைப்பேட்டை - வாலாஜாபேட்டை பணிகள் 74.90% அளவிற்கும் முடிவடைந்துள்ளதாகவும், இந்தப் பணிகள் 2025 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும்.
இது தவிர, சென்னை - திருப்பதி, மாமல்லபுரம் - முகையூர், தர்மபுரி - தொரப்பள்ளி, பொள்ளாச்சி - மடத்துக்குளம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி, மேலூர் - காரைக்குடி, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் - பழனி, திருமங்கலம் - வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications