"உண்மையில்லை".. சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்கிறது பிபிசி.. பாஜக எம்.பி. குற்றச்சாட்டு
சீன நிறுவனங்கள் பிபிசியுடன் ஒப்பந்தம் வைத்துக்கொள்ள அந்நாட்டு அரசு ஸ்பான்சர் செய்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளாார்.
டெல்லி: சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் பிபிசி ஊடகம் ஈடுபட்டு வருவதாக பாஜக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜேத்மலானி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளிட்ட ஆவணப்படங்கள் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மகேஷ் ஜேத்மலானி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தான் சொல்வதற்கு ஆதாரமாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தியையும் மேற்கோள்காட்டி இருக்கிறார் மகேஷ் ஜேத்மலானி.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு.. பெண் பக்தர் வாக்குவாதம்
புயலை கிளப்பிய பிபிசி
பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான அந்த ஆவணப்படத்தில், அந்தக் கலவரத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே தொடர்பு இருப்பதை போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றமே குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என தீர்ப்பளித்த நிலையில், பிபிசியின் இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த ஆவணப்படத்தை தடையை மீறி சில கல்லூரிகளும், கட்சிகளும் திரையிட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
"சீனாவிடம் பணம் பெற்றுக் கொண்டு"..
இந்த ஆவணப்படத்தை வெளியிட்டதை அடுத்து, பிபிசியை பாஜகவும், வலதுசாரி அமைப்புகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பிபிசி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஏன் பிபிசி இந்தியாவுக்கு எதிராக (ஆன்ட்டி - இந்தியா) இருக்கிறது? ஏனெனில் பிபிசிக்கு சீனாவின் ஹுவாவேய் நிறுவனத்திடம் இருந்து அதிக பணம் தேவைப்படுகிறது. அதனால் அந்நாட்டுக்கு சாதகமாக பிபிசி பரப்புரை மேற்கொள்கிறது. பணத்துக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம்தான் இது. பிபிசி விலைக்கு வந்துவிட்டது" என அவர் கூறியுள்ளார். மேலும், அந்த ட்விட்டர் பதிவில் பிரிட்டனில் இருந்து வெளியாகும் 'தி ஸ்பெக்டாக்டர்' இதழில் வெளியான ஒரு செய்தியையும் ஆதாரமாக இணைத்துள்ளார் ஜேத்மலானி.
"அனைவருக்கும் தெரிந்ததுதான்"
இதேபோல, பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா கூறுகையில், "சீன நிறுவனங்கள் பிபிசியுடன் ஒப்பந்தம் வைத்துக்கொள்ள அந்நாட்டு அரசு ஸ்பான்சர் செய்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எனவே, பிபிசியும், நமது எதிர்க்கட்சிகளும் சேர்ந்துதான் இந்த வேலையை (ஆவணப்படம்) செய்துள்ளதாக அனுமானிக்க முடிகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்த செய்திகளை தடுப்பதற்காக இதுபோன்ற ஆவணப்படங்களை அவை பயன்படுத்தப்படுகின்றன" என்றார்.
கார்த்தி சிதம்பரம் சாடல்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "பிபிசி ஆவணப்படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மையில்லை என மத்திய அரசு நம்பினால், அந்த ஊடகத்திற்கு எதிராக சட்ட ரீதியாக தான் அணுக வேண்டும். இந்த காலத்தில் எந்த விஷயத்தையும் யாராலும் தடை செய்ய முடியாது. அதை எப்படி தேடி எங்கு பார்க்க வேண்டும் என்பதை மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள். மத்திய அரசுக்கு சீனா பற்றி பேச வேண்டுமானால், இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் ஊடுருவியது பற்றிதான் பேச வேண்டும்" என்றார்.