அரிய மண் தாதுக்கள் சந்தையில் கொடி கட்டிப் பறக்கும் சீனா- உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்து!
டெல்லி: சர்வதேச நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அரிய மண் தாதுக்கள் எனப்படும் Rare Earth Elements சந்தையில் சீனா கொடிகட்டிப் பறக்கிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.
மின்சார வாகனங்கள் உள்ளிட்டவைகளைத் தயாரிக்க பயன்படுகிற நியோடைமியம் காந்தம், ஸ்கேன்டியம் உள்ளிட்ட உலோகங்கள், தனிமங்கள் உலகின் அரிய வகை மண் தாதுக்கள்/ உலோகங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நாடு விடுதலைக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அப்போது இத்துறையில் இந்தியா முன்னணியில் இருந்தது. பின்னர் அமெரிகக இந்த இடத்துக்கு வந்தது.
தற்போது அரியவகை மண் தாதுக்கள் சர்வதேச சந்தையில் பெரும்பகுதி சீனா வசமாக உள்ளது. சீனா, 2021-ம் ஆண்டு சுமார் 168,000 டன் அரிய வகை தாதுக்களை 2021-ம் ஆண்டு உற்பத்தி செய்திருக்கிறது. இது சர்வதே சந்தையில் 61% ஆகும். ஆனால் சீனாவின் உண்மையான உற்பத்தி திறன் இதனைவிட கூடுதலாக இருக்கும் என்பது சர்வதேசத்தின் கணிப்பு.
சீனாவின் வசம் சுமார் 44 மில்லியன் டன் அரியவகை மண் தாதுக்கள் கையிருப்பில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக வியட்நாம், பிரேசில், ரஷ்யா உள்ளதாம். அமெரிக்கா வசம் 1.8 மில்லியன் டன் கையிருப்பு இருக்கிறதாம். 1980, 1990களில் உலகமயமாக்கல் என்பது முழுவீச்சில் உலக நாடுகளின் கதவுகளை தட்டிய காரணத்தால் சீனா இத்துறையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
உதாரணமாக இந்த அரிய வகை தாதுக்களில் ஒன்றுதான் நியோடைமியம் காந்தம். ப்ளாட் ஸ்கிரீன் டிவிக்கள், மானிட்டர்கள், ஸ்மார்ட்போன்கள், மைக்ரோ போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் டிரைவ்கள், எலக்ட்ரிக் கார்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், ஸ்பீக்கர்கள், சோலார் பேனல்கள் என அனைத்திலும் இதன் பயன்பாடு மிக முக்கியமானது. இத்தகைய நியோடைமியம் காந்தம் ஒவ்வொரு படிநிலைகளாக உருமாற்றம் செய்யப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த துறைகளில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை முன்னணியில் இருக்கின்றன.
வெறும் பொதுமக்கள் பயன்பாட்டில் மட்டுமல்ல.. ராணுவ பயன்பாடுகளிலும் இத்தகைய அரிய வகை தனிமங்கள் பிரதான பங்களிப்பு செலுத்துகின்றன. போர் விமானங்கள் தயாரிப்பு, நீர்மூழ்கிக் கப்பல்கள், ரேடார்கள், ஏவுகணைக தயாரிப்பு ஆகியவற்றிலும் இவை முக்கியமான பொருளாகும். அமெரிக்காவின் போர் விமானங்களான எப்.35, கடந்த ஆண்டு திடீரென ஒரு மாத காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தன. இதற்கு காரணமே, இந்த போர் விமானங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட தனிமங்கள் சீனாவில் இருந்து பெற்றப்பட்டன என்பதால்தான். சீனாவின் வசமிருக்கும் இத்தகைய அரிய வகை தனிமங்கள்/ தாதுக்களை பயன்படுத்துவதில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது. இருநாடுகளிடையேயான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த வர்த்தகமும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது என்கின்றனர்.
அண்மையில் நமது நாட்டில் மின்சார வாகனங்களுக்கு அதிகம் தேவைப்படும் நியோடைமியம் அயர்ன் போரான் (Nd-Fe-B) காந்தங்கள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். 90%க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இந்த வகை காந்தங்களால் உருவாக்கப்பட்ட மோட்டார்களால் இயங்குகின்றன. இதன் காந்தத் தன்மையின் சிறப்பான செயல்பாட்டால் 1984ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது முதல், பல்வேறு சாதனங்களுக்கு இந்த காந்தம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் பவுடர் மெட்டலார்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ்-க்கான சர்வதேச மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (ஏ.ஆர்.சி.ஐ) உள்ள வாகன எரிசக்தி உற்பத்தி பொருட்களுக்கான மையத்தின் விஞ்ஞானிகள் இந்த வகை காந்தங்களை உருவாக்கும் புதிய உத்தியை அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு இணங்க அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதி உதவியோடு புதிய உத்தியைப் பயன்படுத்தி காந்தங்களை உருவாக்கும் ஆலையை அமைக்கும் பணியில் ஏ.ஆர்.சி.ஐ மையம் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் வணிக ரீதியாக நியோடைமியம் அயர்ன் போரான் காந்தங்களை உற்பத்தி செய்யவும் இந்த உத்தி உதவிகரமாக இருக்கும். இதனால் வாகன உற்பத்தி துறையின் முக்கிய தேவைகள் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்பட்டு, வெளிநாடுகள் மீதான சார்பு வெகுவாகக் குறையும்.
இந்த அரியவகை மண்/ தாது/ தனிம துறையில் சீனா 2016-ம் ஆண்டுதான் உச்சத்தை தொட்டது. அப்போது சீனாவின் பங்களிப்பு சர்வதேச சந்தையில் 86% ஆக உயர்ந்து நின்றது. நவீன அறிவியல் உலகமானது இத்தகைய அரிய வகை தாதுக்கள்/ தனிமங்களை சார்ந்ததாக இருப்பதால் பெரும்பாலான நாடுகள் சீனாவையே சார்ந்து நிற்க வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் Mountain Pass மலைப்பிரதேசம்தான் அந்நாட்டின் அரியவகை மண்/தாதுக்கள்/ தனிமங்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. விண்வெளி, பாதுகாப்பு, பொதுமக்கள் பயன்பாடு என அத்தனை துறைகளிலும் இந்த அரிய் வகை மண் அல்லது தாதுக்கள் அல்லது தனிமங்களின் பயன்பாடு முன்னைவிட அதிகரித்துள்ளது. ஆனால் இதன் பெரும்பகுதி சீனாவை சார்ந்தே நிற்க வேண்டியிருப்பதால்தான் இப்போது சர்வதேச நாடுகள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டிருக்கின்றன.