ஷிப்ட் போட்டு ஆர்ப்பாட்டம்.. விடிய விடிய நடந்த போராட்டம்.. கண் இமைக்காத மாணவர்கள்.. விஸ்வரூபம்!
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நேற்று இரவு முழுக்க நாடு முழுக்க நடந்தது.
Recommended Video
டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நேற்று இரவு முழுக்க நாடு முழுக்க நடந்தது. மாணவர்கள் பலர் உறக்கமின்றி போராட்டம் செய்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தற்போது காட்டு தீ போல போராட்டம் பரவி வருகிறது. அசாமில் நான்கு நாட்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இது. இந்த சட்டம் செயல்பட தொடங்கினால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம்.
11 மணி நேர அடையாள எதிர்ப்பு பேரணியோடு முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவி வருகிறது. தற்போது டெல்லி முதல் சென்னை வரை இந்தியா முழுக்க இந்த போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று எப்படி
நேற்று இரவு முழுக்க மும்பை, புனே, லக்னோ, பாட்னா, டெல்லி, கவுகாத்தி, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் விடாமல் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் செய்து வருகிறார்கள்.
மாணவர்கள்
இன்னொரு பக்கம் டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு முதலில் போராடுவது ஜேஎன்யூ மாணவர்கள்தான். இவர்களும் நேற்று இரவு முழுக்க கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
ஐஐடி போராட்டம்
இன்னொரு பக்கம் நாடு முழுக்க இருக்கும் ஐஐடிகளில் கடுமையான போராட்டங்கள் நடந்தது. மும்பை, சென்னை, கவுகாத்தி ஐஐடிகளில் இரவு முழுக்க போராட்டம் நடந்தது. மேற்கு வங்கத்தில் இருக்கும் கல்லூரிகளில் மிக கடுமையாக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர்.
உறக்கம் இல்லை
பல இடங்களில் மாணவர்கள் உறக்கமின்றி போராட்டம் செய்தனர். இன்னும் சில பகுதிகளில் பாதி மாணவர்கள் இரவும், பாதி மாணவர்கள் பகலிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் 24 மணி நேரமும் போராட்டம் நடக்கும் வகையில் மாணவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
வேறு எங்கு
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழக மாணவர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறைய மாணவிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இன்னொரு பக்கம் நாக்பூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் விடிய விடிய போராட்டம் மேற்கொண்டனர். வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தால் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.