உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் யூ-டர்ன்.. தலைமை நீதிபதியிடம் போகும் குமுறல்
டெல்லி: நீதிபதிகள் நியமன விவகாரம் ஒன்றில் உச்சநீதிமன்ற, நீதிபதிகள் கொலிஜியம், தனது முடிவை மாற்றிக்கொண்ட விவகாரம் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. இந்த 'யூ டர்ன்னுக்கு' அதிருப்தி தெரிவித்து, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்க, தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிளை கொண்ட கொலிஜியம் நடைமுறை, நமது நாட்டில் செயல்பாட்டில் உள்ளது.
கடந்த டிசம்பர் 12ம் தேதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய கொலிஜியம் கூடி ஆலோசனை நடத்தியது. அதில், ராஜஸ்தான் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள பிரதீப் நந்த்ரஜாக் மற்றும் டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பணி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
இதன்பிறகு கொலிஜியம் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் மீண்டும் கூடியது. இந்த காலகட்டத்தில் நீதிபதி மதன் பி லோகூர் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு பதில், கொலிஜியத்தில் அருண் மிஷ்ரா இடம் பிடித்திருந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, பிரதீப் நந்த்ரஜாக் தலைமையிலான டெல்லி ஹைகோர்ட் அமர்வு 'F Hoffmann-La Roche Ltd vs Cipla Ltd' என்ற வழக்கில் தவறான உத்தரவை பிறப்பித்து அதற்கு வருத்தம் தெரிவித்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரத்திற்காக, உச்சநீதிமன்ற நீதிபதி பட்டியலில் இருந்து பிரதீப் நந்த்ரஜாக் பெயரை விடுவித்துவிட கொலிஜியம் முடிவு செய்தது.
இதேபோல ராஜேந்திர மேனனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் தங்களது பழைய முடிவை கைவிட்ட கொலிஜியம், இவ்விருவருக்கும் பதிலாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றத்தை சேர்ந்த சில நீதிபதிகளுக்கு, இவ்வாறு கொலிஜியம் தனது முடிவை மாற்றியிருக்க கூடாது என்ற எண்ணம் உள்ளது. அதில் சஞ்சய் கவுல் என்ற நீதிபதி, தனது எண்ணத்தை கடிதமாக எழுதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலிஜியத்தின் முடிவு மதிக்கப்படத்தக்கதாக இருக்க வேண்டும் என்றால் அதில் மாற்றம் செய்ய கூடாது என்பது பல நீதிபதிகளின் கருத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சீவ் கன்னாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்குவதில் தவறில்லை என்றாலும் அவர் காத்திருக்க கால அவகாசம் உள்ளது, அதேநேரம், சீனியாரிட்டிப்படி, ஏற்கனவே எடுத்த முடிவை கொலிஜியம் மாற்றக்கூடாது என்றும் தனது கடிதத்தில் கவுல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.