இடஒதுக்கீடு விவகாரம்- லோக்சபாவில் விவாதிக்க காங்., திமுக, முஸ்லிம் லீக், சிபிஎம் நோட்டீஸ்
டெல்லி: அரசு பணிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வது குறித்து லோக்சபாவில் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை நோட்டீஸ் கொடுத்துள்ளன.
இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனால் இடஒதுக்கீட்டை உறுதி செய்கிற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானும் சக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இந்நிலையில் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து லோக்சபாவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. அதில், இடஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்வது என்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு பேரிடியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி, பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு என்பது கட்டாயமல்ல.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இதேபோல் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க முஸ்லிம் லீக், திமுக, சிபிஎம் கட்சிகளும் கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளன.