உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.. ‘மணிப்பூர்’ பக்கம் எப்ப போவீங்க? காங்கிரஸ் பொளேர் கேள்வி!
டெல்லி: ரஷ்யாவின் தாக்குதலை 2 ஆண்டுகளாக எதிர்கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 24-ந் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். போரின் பிடியில் சிக்கி இருக்கும் உக்ரைன் நாட்டின் தேசிய தின நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். உக்ரைனுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாகவோ உக்ரைன் பயணத்துக்கு பின்னரோ இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கும் செல்ல வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைன் நாடு மீது 2022-ம் ஆண்டு ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 2 ஆண்டுகளாக பேரிழப்புகளை எதிர்கொண்டபடி ரஷ்யாவின் போரை உக்ரைன் தாங்கி வருகிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான உக்ரைன் நெருக்கத்தால் கோபமடைந்த ரஷ்யா இந்த போரை நடத்தி வருகிறது.

ஜெலென்ஸ்கியுடன் மோடி பேச்சு: உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் இந்த போரை நிறுத்த முயற்சித்தும் 2 ஆண்டுகளாக யுத்தம் நீடித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ரஷ்யாவுடனும் உக்ரைனுடன் நட்பு கரம் நீட்டினாலும் போரை நிறுத்த வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைவதற்கு நீண்ட கால தீர்வாக தூதரக வழியில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார். அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மோடிக்கு ஜெலென்ஸ்கி வாழ்த்து: பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவி ஏற்ற போதும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஜெலென்ஸ்கிக்கு அவருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உக்ரைனுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டிருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர். உக்ரைனில் நடைபெற்று வரும் மோதல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி , மக்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் அணுகுமுறையை எடுத்துரைத்ததுடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜீயமுறையில் மோதலுக்கு விரைவான, அமைதியான மற்றும் நீடித்த தீர்வுக்குத் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
காங்கிரஸ் விமர்சனம்: இந்த நிலையில் உக்ரைன் நாட்டு தேசிய தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆகஸ்ட் 24-ந் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், உக்ரைன் செல்வதற்கு முன்னதாகவோ அல்லது அதன் பின்னரோ பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும். மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியை தனியே சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? அல்லது பாஜக முதல்வர்கள் மாநாட்டின் போது மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்புகின்றனர் மணிப்பூர் மக்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications