காங்கிரஸில் வரவிருக்கும் மிக பெரிய மாற்றங்கள்.. என்னவாகும் "மிஷன் 2024"! 8 முக்கிய தகவல்கள்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ராஜஸ்தானில் 3 நாட்கள் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைமையில் மாற்ற வேண்டும் என்ற குரலும் சற்றே அதிகமாக எழத் தொடங்கியது. இதனிடையே காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கக் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் அறிவிக்கப்பட்டது.
சிந்தனை அமர்வு கூட்டம்
1 இந்தக் கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் இன்று தொடங்கி அடுத்து மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உட்பட சுமார் 400 தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்திற்குப் பின், கட்சியில் பெரிய மாற்றங்கள் காத்திருக்கின்றன என்று மூத்த தலைவர் அஜய் மக்கன் கூறினார்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்
2 மேலும், தேர்தல்களில் ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு மட்டமே இடம் என்ற கொள்கையை அமல்படுத்தவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சீட் என்ற விதியை மீண்டும் கொண்டு வருவதில் ஒருமித்த கருத்து இருப்பதாகக் காங்கிரஸ் கூறியது, ஆனால், இதில் இருந்து நேரு குடும்பத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
ஆக்டிவ் அரசியல்
3 இது குறித்து அஜய் மாக்கன் கூறுகையில், "இந்த விதியில் ஒருமித்த கருத்து உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட விரும்பினால், அவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆக்டிவ் அரசியலில் இருக்க வேண்டும். நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாகவே ஆக்டிவ் அரசியலில் தான் உள்ளனர். கடந்த 2018 முதல் பிரியங்கா காந்தி கூட தீவிர அரசியிலில் உள்ளார்" என்றார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
4 அடுத்து வரும் ஆண்டுகளில் பல முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் இடங்களில் குறைந்தது 50% இடத்தை 50 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஒதுக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள இளைஞர்களைக் கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5 மேலும், ஒரு நபரால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பதவியில் இருக்க முடியாது என்றும் குறைந்தது 3 ஆண்டுகள் அந்த நபருக்கு வேறு பொறுப்பு கொடுக்கப்படும் என்றார். காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிளவுபடுத்தும் செயல்
6 நாட்டில் நடந்து வரும் மத ரீதியான பிளவுபடுத்தும் செயல்கள் 2024 மக்களவை தேர்தலுக்குத் தயாராகும் நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
7 கட்சி, பொருளாதாரம், அரசியல் நிலைமை, சமூக நீதி, விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் விவகாரம் குறித்து ஆலோசிக்க தனித்தனியாக 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 60 முதல் 70 பேர் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
8 ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்தி மாநாட்டின் கடைசி நாள் அன்று உரையாற்றுகிறார்.