சிபிஐ அலுவலகங்கள் முன் பெரிய போராட்டம் நடத்திய காங்கிரஸ்.. மாஸ் காட்டிய ராகுல்!
இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

டெல்லி: இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

பெரிய போராட்டம்
இதற்கு எதிரான அலோக் வெர்மா தொடுத்த வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக சிபிஐ தலைமையகம் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார். இதில் 1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.

தமிழ்நாடு
மற்ற அலுவலகங்களில் காங்கிரஸ் கட்சியின் வெவ்வேறு தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி, சென்னை உட்பட நாடு முழுக்க காங்கிரஸ் போராட்டம் செய்து வருகிறது. சென்னையில் சிபிஐ அலுவலகம் முன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

என்ன கோரிக்கை
பிரதமர் மோடி சிபிஐ அமைப்பை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அலோக் வெர்மா மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும், ராகேஷ் அஸ்தானா மீது நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் செய்ய உள்ளது.

மற்ற கட்சியும் ஆதரவு
காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த போராட்டத்திற்கு இன்னும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜனதா தளம் கட்சி சார்பாக சரத் யாதவ் போராட்டம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக டி ராஜாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக நதிமுல் ஹாக் கலந்து கொண்டார்.
|
போலீஸ் தாக்குதல்
இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தி இருக்கிறது. டெல்லி சிபிஐ தலைமையகத்தை சுற்றி பாதுகாப்பிற்காக தடுப்பு சுவர் அமைத்து இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவின் பிற பகுதியில் நடந்த போராட்டத்திலும் தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கைதானார்
இந்த நிலையில் டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதான காங்கிரஸ் தலைவர் ராகுல் 30 நிமிடங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications