கேம் ஸ்டார்ட்.. நாடே எதிர்பார்க்குதே! இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் உரை - நாளை மோடி
டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார்.
மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இதுபற்றி விளக்கம் கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அதேபோல் மாநிலங்களவையில் இதுபற்றி விரிவாக விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் தொடர்ந்து பல முறை மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் இதுபற்றி விவாதிக்க அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்கும் வரை ஓயமாட்டோம் என எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன. எனவே பிரதமர் மோடியை பேச வைக்க புதிய முயற்சியை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. அதன்பேரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
பாஜக அரசுக்கு பெரும்பான்மை இருந்தாலும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பேச வைப்பதற்காக இந்த உத்தியை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டார் சபாநாயகர் ஓம் பிர்லா.
அகஸ்ட் 8 ஆம் தேதியான இன்று இதன் மீதான விவாதம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்து இருக்கின்றன.
மறுபக்கம் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க உள்ளன. மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் நடுநிலை வகிக்க முடிவு செய்து உள்ளன. இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது.
அதன் மீது காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, மணிஷ் திவாரி, கௌரவ் கோகோய், தீபக் பைஜ் ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்ற உள்ளார். ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நேற்று அவருக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அவரது உரையை பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். நாளை இதன் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உரைக்கு பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications