பிரதமரே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லை.. பில்கிஸ் பானு விவகாரம் குறித்து ராகுல் ட்வீட்!
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள், விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Recommended Video
கடந்த 2002ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத் வந்த சபர்மதி ரயில், கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதலை தொடங்கினர்.
யார் இந்த பில்கிஸ் பானோ? குஜராத்தில் அவருக்கு நடந்த கொடுமை என்ன? நெஞ்சை பிழியும் நிகழ்வு
பில்கிஸ் பானு
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, இந்துத்துவ கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.
குற்றவாளிகள் விடுதலை
சிபிஐ விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
ஆரத்தி எடுத்து வரவேற்பு
விடுதலைக்கு பின் வெளியே வந்த குற்றவாளிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரும், விடுதலையாகியிருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் கண்டனம்
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 3 வயது சிறுமியை கொலை செய்தவர்கள் சுதந்திர தின அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டனர்.
இதன் மூலம் பெண் சக்தி பற்றி பொய் பேசுபவர்களால் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது? பிரதமரே, உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.