காங். தலைவர் பதவிக்கான கோதாவில் குதித்தார் சசி தரூர்! அறிவித்தபடி வேட்புமனுத் தாக்கல் செய்தார்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸில் இருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என மூத்த தலைவர்களும் வெளியேறிவிட்டனர்.
னர்.
பச்சைக்கொடி அசைத்த மோடி! சீறி பாய்ந்து கிளம்பிய காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில்! டாப் ஸ்பீட் 160
சோனியா குடும்பம்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதேநேரத்தில் சோனியா குடும்பத்தின் சாய்ஸாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டால் ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார்.
யார் யார் போட்டி?
அதேநேரத்தில் சசி தரூர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தனர். இவர்களுடன் பவன் பன்சாலும் வேட்புமனுக்களை வாங்கிச் சென்றார். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
சசி தரூர் வேட்புமனுத் தாக்கல்
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் கமிட்டித் தலைமை அலுவலகத்தில் சசி தரூர் எம்.பி. இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சசி தரூர் தர்போது திருவனந்தபுரம் எம்.பி.யாக உள்ளார். தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரியிடம் சசி தரூர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக சோனியா குடும்பத்தின் விருப்பப் பட்டியலில் முகுல் வாஸ்னிக் அல்லது மீரா குமார் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்களும் வெளியாகின. இருவரில் ஒருவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் தலைவர் பதவிக்கான கோதாவில் களமிறங்குகிறார் என்கின்றன டெல்லி தகவல்கள். இன்னொரு பக்கம், காங்கிரஸின் 23 தலைவர்களை உள்ளடக்கிய அதிருப்தி குழுவும் தலைவர் பதவி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. இந்த அதிருப்தி குழுவின் சார்பாக மணீஷ் திவாரி களம் காணலாம் எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மல்லிகார்ஜூன கார்கே
இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா காங்கிரஸ் குழு தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை 30 காங்கிரஸ் தலைவர்கள் வழிமொழிந்தனர். இதனால் தற்போதைய நிலையில் சசி தரூர்- மல்லிகார்ஜூன கார்கே இடையே போட்டி நிலவுகிறது.