100 ஆண்டுகள் பாரம்பரியம்...தோல்வியில் துவளும் காங்கிரஸ்...என்னதான் காரணம்!!
டெல்லி: காங்கிரஸ் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் வாய்ந்த அரசியல் கட்சி. நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி அதிகாரம் செலுத்திய பழமையான கட்சி. இந்தியா என்றாலே காங்கிரஸ் மட்டும்தான் ஆளுமை வாய்ந்த, அதிகாரம் நிறைந்த கட்சி என்று பார்க்கப்பட்டது.
Recommended Video
தற்போது இந்தக் கட்சின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி அந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாயின. இன்று இதற்கான முடிவை எடுப்பதற்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது. மாநிலங்களில் இருந்து அனைத்து முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் சோனியாவுடன் காணொளியில் இணைந்துள்ளனர். கூட்டம் துவங்கி நடந்து வருகிறது.
ராகுலுக்கு எதிராக...சோனியாவுக்கு கடிதம்...கட்சியை கலங்க வைத்த அந்த 4 பேர்!!
தொண்டன் முக்கியம்
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி ஏன் தலைமைக்கு இன்று தடுமாறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் சித்தாந்த மாற்றம் இல்லை. கொள்கை மாற்றம் இல்லை. எந்த முடிவை எப்போது எடுத்து இருக்க வேண்டுமோ அதை எடுக்கவில்லை. துரிதமாக செயல்படவில்லை. கீழ்மட்டத் தலைவர்களை மதிக்கவில்லை. தொண்டனை தட்டிக் கொடுக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பெரியவர்கள், சிறியவர்கள் என்ற இடைவெளி உருவானது. இதை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து ஆராய தலைமை மறந்தது. மாநில அளவில் தலைமையை உருவாக்க மறந்தது. இப்படி கோட்டை விட்டதற்கு ஏராளமான காரணங்களை கூறலாம்.
வாரிசு போட்டி
2014, 2019 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்தித்தது. இதற்குக் காரணம் முந்தைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியை கீழ்மட்டம் வரை எடுத்து செல்லவில்லை. பாஜகவை தவறாக எடை போட்டது என்று கூறலாம். களத்தில் இறங்கி எந்த மூத்த தலைவர்களும் வேலை செய்யவில்லை. பதவியே முக்கியம் என்று களத்தில் இருந்தனர். தங்களது வாரிசுகளுக்கு பதவிப் போட்டா போட்டி போட்டனர்.
இளம் தலைவர்கள்
இந்த நிலையில், கட்சிக்குள் தலைமை இடைவெளி இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்களில் கூறி வந்தார். கட்சியில் மூத்த தலைவர்கள் இன்றும் தங்களது வாரிசுகளை அங்கீகரிக்க வேண்டும் தலைமையுடன் மோதி வருகின்றனர். இதை ராகுல் விரும்பவில்லை. கட்சிக்குள் இளம் ரத்தம் பாய வேண்டும் என்று விரும்புகிறார். அவரைப் போல் அடிமட்டத் தொண்டனையும் நேரில் சந்தித்து பேச வேண்டும். மக்களுடன் மக்களாக சென்று அவர்களது குறைகளை அறிய வேண்டும் என்பது ராகுலின் விருப்பம்.
போட்டா போட்டி
ஆனால், துரதிஷ்டம் இன்று கட்சியில் அதுபோன்று பணியாற்ற ஆட்கள் இல்லை. ராஜ்ய சபை சீட்டுக்கும், மாநிலத்தில் எம்.பி. சீட்டுக்கும் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். இதுதான் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களிலும் வெடித்தது. மத்தியப்பிரதேசத்தில் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை இழந்தனர்.
கோட்டை விட்ட தலைமை
மாநிலத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் வலிமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் இன்றும் உட்கட்சி அரசியல் தலைதூக்கி வருகிறது. இதனால், மாநிலங்களில் கட்சி வளருவது கடினமாக இருக்கிறது. கட்சிப் பணிக்கு என்று ஒருவர் வந்தால், கட்சியில் நமக்கு ஆதாயம் இருக்கிறதா என்று பார்த்து வருவது சகஜம்தான். சிலர்தான் கொள்கைப்பிடிப்புடன், கட்சிக்காக உயிர் விடுவார்கள். அந்த சமயங்களில் தட்டிக் கொடுத்து மாநிலங்களில் கட்சிகளை வளர்க்க வேண்டும்.
மோடியை எதிர்க்க
இதுவரை எந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது இல்லை. மாநிலம் மாநிலமாக சென்று தங்களது கொள்கைகளை, சித்தாந்தங்களை கூறியது இல்லை. இப்படி இருந்தால் கட்சியை வளர்ப்பது என்பது முடியாத காரியம். பிரதமர் மோடிக்கு எதிராக தீவிர அரசியல் செய்ய வேண்டுமானால், களத்தில் இறங்கி நடப்பு அரசின் தவறுகளை எடுத்து சொல்ல வேண்டும். தற்போது இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் மோடியை, அவரது ஆட்சியை விமர்சிக்க முன் வரவில்லை. தயாராகவும் இல்லை. முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் அளவிற்கு யாரும் மோடியை விமர்சிப்பதில்லை. இதுவும் ராகுலை கோபப்படுத்தியுள்ளது.
ஓரிடத்தில் அதிகாரம்
ராகுல் காந்திக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சிக்குள் ஆதரவு எழுந்தாலும், இதை மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. இதை கட்சி தலைமை ''களை' எடுத்தே ஆக வேண்டும். தலைமை எடுக்கும் முடிவில் விருப்பம் இல்லாதவர்களை ஓரம் கட்டவேண்டும். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து இருக்க வேண்டும். காலத்திற்கு தகுந்தவாறு தங்களது போர்குணத்தை மாற்றிக் கொள்ள காங்கிரஸ் தலைமை தயாராகாவிட்டால், காலம் தான் பதில் சொல்லும்.