இன்றைக்கே தெறிக்கவிட்ட எதிர்க்கட்சிகள்.. டெல்லி அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆடிப் போன மத்திய அரசு!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசு கூட்டத்திலேயே அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தினர். லோக்சபா துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும், நீட் முறைகேடுகள், யுபிஎஸ்சி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தில் நாளை பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து ஜூலை 23-ல் நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகித்தனர். இந்தக் கூட்டத்தில, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ வேண்டுகோள் விடுத்தார்.
நீட் முறைகேடுகள், துணை சபாநாயகர்: இதனையடுத்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் நீட் முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் லோக்சபா துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமாஜ்வாதி எம்பி ராம்கோபால் யாதவ் பேசுகையில், உத்தரப்பிரதேசத்தில் நாளை தொடங்கும் கன்வர் யாத்திரையின் போது உணவகங்களின் பெயர் பலகைகளில் உரிமையாளர்கள் பெயர் இருக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய உத்தரப்பிரதேச அரசின் உத்தரவு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆந்திராவிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் குறித்து வைத்து ஆளும் பாஜக கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் அரசால் பழிவாங்கப்படுவதாக அக்கட்சி எம்பி இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் ஜூலை 23-ல் பட்ஜெட் தாக்கல்: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்- மமதா கட்சி புறக்கணிப்பு!
மேலும் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்கள் இன்றையக் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசினர்.
திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா, விசிகவின் தொல்.திருமாவளவன், ரவிக்குமார், பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் , காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கொடிக்குன்னில் சுரேஷ், மஜ்லிஸ் கட்சி ஓவைசி, ஆர்ஜேடியின் அபய் குஷாவாஹா, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளாக நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் தாக்கல் செய்வது உள்ளிட்ட 6 முக்கிய மசோதாக்கள் தாக்கலாகக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications