நாடாளுமன்றத்தில் ஜூலை 23-ல் பட்ஜெட் தாக்கல்: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்- மமதா கட்சி புறக்கணிப்பு!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் மத்திய அரசு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஜூலை 23-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நாளை பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்தது.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் ஜூன்24-ந் தேதி தொடங்கி ஜூலை 2-ந் தேதி வரை நடைபெற்றது. முதல் கூட்டத் தொடரில் 18-வது லோக்சபாவின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். 17-வது லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தவர் ஓம் பிர்லா.

ஜனாதிபதி உரை: இதனையடுத்து ஜூன் 27-ந் தேதி நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களுக்கு இருசபைகளிலும் பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதமும் இம்முறை நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் அமளி: மேலும் நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் நீட் முறைகேடுகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. ஆனால் இத்ற்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி சபை நடவடிக்கைகளை முடக்கினர். இதனையடுத்து இரு சபைகளும் ஜூலை 2-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டன.

நாளை முதல் நாடாளுமன்றம்: இந்தநிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெறும். லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் கடந்த பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் நாளை மறுநாள் ஜூலை 23-ல் முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். முன்னதாக நாளைய கூட்டத் தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
#WATCH | Delhi | Leaders from different parties at the Parliament where an all-party meeting will begin shortly. pic.twitter.com/vy7z6WWche
— ANI (@ANI) July 21, 2024
அனைத்துக் கட்சிக் கூட்டம்: இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இன்று முற்பகல் 11 மணிக்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
திரிணாமுல் புறக்கணிப்பு ஏன்?: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஜூலை 21-ந் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1993-ம் ஆண்டு அன்றைய இடதுசாரி அரசாங்கமானது மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்த நாளை தியாகிகள் தினமாக கடைபிடித்து வருகின்றனர். 1998-ல் திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்ட போதும் ஆண்டு தோறும் ஜூலை 21-ந் தேதி தியாகிகள் தினமாகவே கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திரிணாமுல் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications