நாட்டை உலுக்கும் "நீட்" முறைகேடுகள்.. களமிறங்கும் காங்கிரஸ்..இன்று நாடு முழுவதும் கண்டனப் போராட்டம்!
டெல்லி: இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட முறைகேடுகள் நாட்டை உலுக்கிய நிலையில் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் தொடங்கி ஏராளமான முறைகேடு புகார்கள் அடுத்தடுத்து குவிந்து கொண்டிருக்கின்றன. பீகார் மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராகவும் செயல்பட்டதும் அம்பலமாகி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்திலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதியதாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பீகார், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.
நீட் நுழைவுத் தேர்வில் 0.001% கூட அலட்சியம் காட்டக் கூடாது; அப்படி முறைகேடுகள் நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்திருந்தனர். அத்துடன் ஒருவர் மோசடி செய்து மருத்துவரானால் சமூகத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு ஏற்படும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவிலான போராட்டத்தை நடத்துகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டிருந்த அறிக்கையில், நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதி வழங்கக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் நீட் நுழைவுத் தேர்வு முறையே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாநிலங்கள் விரும்பினால் நீட் தேர்வு நடத்தலாம் என்கிற ஷரத்து அப்போது இருந்தது. 2014-க்குப் பின்னர் இந்த ஷரத்து நீக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications