'ரொம்ப' நல்லவன்னு சொல்லியே ஊம குத்து குத்தி முட்டு சந்துல நிறுத்தறாங்க.. காங். 'தற்காப்பு' ஆலோசனை!
டெல்லி: டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
லோக்சபா தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட 'இந்தியா' கூட்டணியின் மையப் புள்ளி காங்கிரஸ்தான். ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கிற அத்தனை கூட்டணி கட்சிகளும் காங்கிரஸை 'வசமாக' சிக்கிய கைப்புள்ள ரேஞ்சுக்குதான் வெளுக்கிறார்கள்.

லோக்சபா தேர்தலில் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்; பிரியங்காதான் பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் உதார் விட்டுக் கொடுத்திருந்தன காங்கிரஸ் தலைகள். இன்னொரு பக்கம், அதெப்படி நாங்க நிதிஷ்குமாரை நிறுத்துவோம் என்றார் லாலு. நிதிஷ்குமாரும் இலவு காத்த கிளியாக ஏகப்பட்ட கனவுகளுடன் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் கூடிய 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் மமதாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆடிய ருத்ரதாண்டவத்தில் காங்கிரஸ் கட்சி வெலவெலத்து போய் கிடக்கிறது. மமதா கொடுத்த தர்ம அடியில் எழுந்து நிற்கவே காங்கிரஸ் கட்சிக்கு 2 வாரங்களாகும் போல. காங்கிரஸ் கட்சியில் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக்குவோமே என சொல்லி ராகுல், பிரியங்கா சாய்ஸ்க்கு பெரும் வேட்டு வைத்தார் மமதா பானர்ஜி.
அதே போல காங்கிரஸ் பெரிய ஆள்தான்.. ரொம்ப நல்ல கட்சிதான் என்கிற தொனியில் நாடு முழுவதும் 300 இடங்களில் போட்டியிடக் கூடிய கட்சிதான் காங்கிரஸ். ஆனால் என்ன பிரயோஜனம்.. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கட்சிகள் கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொண்டு நடையை கட்டிவிட வேண்டும்.. பெரியண்ணன் தனம் எல்லாம் பண்ணப்படாது என போகிற போக்கில் பொளேர் பொளேர் என நாலு காட்டு காட்டிவிட்டார் மமதா பானர்ஜி. வடிவேலுவை நாலு பேர் கொண்டு போய் முட்டு சந்தில் கும்முவதைப் போல மேற்கு வங்கத்துக்கு காங்கிரஸை இழுத்துக் கொண்டு போன மமதா, லோக்சபா தேர்தலில் 2 சீட் வாங்கிக்கனும்...அவ்வளவுதான்.. உ.பி.யில் அகிலேஷ் கொடுக்கிறதை வாங்கிக்கனும்.. அவ்வளவுதான் என்றெல்லாம் பொளந்து கட்டிவிட்டார்.
#WATCH | Congress Working Committee (CWC) meeting underway at AICC headquarters in Delhi pic.twitter.com/CaueMMtQX4
— ANI (@ANI) December 21, 2023
இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் 'கெவுக்கால்' (ஊம குத்து, உதை) வாங்கிய சோகத்துடன் இப்போது டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. 4 மாநில தேர்தலில் பெரியண்ணன் தனத்தைக் காட்டி பெரிதாக முட்டை வாங்கி வைத்திருக்கும் காங்கிரஸ், தமக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? இந்தியா கூட்டணியில் விழுகிற தர்ம அடியைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா? விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலையே கணக்காக இந்தியா கூட்டணி கட்சிகள் தரும் சொற்ப சீட்டுகளை ஏற்றுத்தான் ஆக வேண்டுமா? என்பதெல்லாம் 'மனம் திறந்து' இன்றைய காங்கிரஸ் 'காரிய கமிட்டி' (அப்படித்தான் தமிழில் எழுதி வந்தனர்) அதாவது செயற்குழு கூட்டம் விவாதிக்கிறது. அந்தோ பரிதாபமே!












Click it and Unblock the Notifications