பரபரப்பு.. மறுவிசாரணை லெவலுக்கு கொண்டு சென்ற காஷ்மீர் பைல்ஸ்.. குடியரசு தலைவருக்கு பறந்த கடிதம்!
டெல்லி: காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை வழக்குகளை மறுவிசாரணை செய்ய உத்தரவிடக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த வாரம் நாடு முழுவதும் வெளியானது.
ரூ.6 ஆயிரம் கோடி தங்க நகை கடன்களும் மார்ச் 31க்குள் தள்ளுபடி.. ஹேப்பி நியூஸ் சொன்ன ஐ.பெரியசாமி
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம்தான் தற்போது தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பிரதமர் மோடி பாராட்டு
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் சலுகை
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
குடியரசுத் தலைவருக்கு கடிதம்
இதனிடையே காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை வழக்குகளை மறுவிசாரணை செய்ய உத்தரவிடக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கடிதம் எழுதியுள்ளார். அதில், "இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதுவரை அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்து முழுவதுமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பண்டிட்டுகள் புகாரளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்டு இதுவரை புகாரளிக்காத பண்டிட்டுகள் புகார் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான வழக்குகள் மறுவிசாரணை செய்யப்படும்போது, 27 ஆண்டுகளுக்கு முந்தைய காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை வழக்குகளையும் விசாரிக்கலாம்.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு உதவுங்கள்
வன்முறையில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் பல ஆண்டுகளாக வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர். அவர்கள் நீதிக்கான வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்." என அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.