தடுப்பூசி 'ஸ்டாக்' இல்ல.. காலையிலேயே கிளம்பி வந்துடாதீங்க - கெஜ்ரிவால் 'அவசர' அறிவிப்பு
டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை (மே.1) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட நிலையில், டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. எங்கிருந்து தொற்று ஏற்படுகிறது, யாரிடம் இருந்து வருகிறது என்பதை கூட சரியாக கணிக்க முடியவில்லை.
குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், மற்றவர்களுக்கும் மிக எளிதில் பரவி விடுகிறது. இதில், உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால் சுத்தம்.. ஆளை காலி செய்து விடுகிறது கொரோனா.

யாரும் வர வேண்டாம்
இந்த சூழலில், நாடு முழுவதும் மே.1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் 28ம் தேதி கோவின் தளத்தில் பதிவு தொடங்கியது. தொடக்கத்தில் ரெஜிஸ்டர் செய்வதில் ஏகப்பட்ட குளறுபடி இருந்ததால், பலரும் சிரமப்பட்டனர். இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், "நாளை தடுப்பூசி போடுவதற்காக யாரும் வரிசைக்கட்டி நிற்க வேண்டாம். எங்களுக்கு தடுப்பூசி ஸ்டாக் கிடைத்தவுடன் சொல்கிறோம், அதன் பிறகு வந்து செலுத்திக் கொண்டால் போதும். அடுத்த சில நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி மையங்களில் எவரும் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

ஓரிரு நாட்களில் பெறுவோம்
"நாடு முழுவதும் பலர் தடுப்பூசிகளுக்கு பதிவு செய்துள்ளனர், ஆனால் எங்களுக்கு இன்னும் அதற்கேற்ற ஸ்டாக் கிடைக்கவில்லை. நாங்கள் மருந்து நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஓரிரு நாட்களில் தடுப்பூசிகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம்" என்று முதல்வர் மேலும் கூறினார்.

67 லட்சம் டோஸ்
டெல்லி அரசு ஞாயிற்றுக்கிழமைக்குள் சுமார் 3 லட்சம் கோவிஷீல்ட் டோஸைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "தடுப்பூசி தயாரிப்பாளர்கள் (சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக்) எங்களுக்கு தலா 67 லட்சம் டோஸ் கொடுப்பார்கள்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அதிக விலைக்கு விற்பனை
பல மாநிலங்கள் தங்களிடம் போதுமான தடுப்பூசி ஸ்டாக் இல்லாததால், தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்க முடியாது என்று கூறியுள்ளன. ஜனவரி மாதம் தொடங்கிய நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில், தற்போது தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் அளவுகளில் 50 சதவீதத்தை மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கிறார்கள், மீதமுள்ளவற்றை தற்போதுள்ள கட்டணத்தில் மத்திய அரசுக்கு வழங்குவார்கள்.

காத்திருக்க வேண்டிய சூழல்
பல மாநிலங்கள் இரட்டை விலை நிர்ணயம் குறித்து புகார் அளித்துள்ளன, மேலும் ஸ்டாக்குகள் பின்னர் வரும் என்று உற்பத்தியாளர்கள் கூறுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், 18 முதல் 44 வரை உள்ளவர்கள் இப்போது காத்திருக்க வேண்டியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications