இந்தியாவில் வீரியமடையும் கொரோனா... 2067 பேருக்கு புதிய தொற்று உறுதி - அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
Covid-19 Cases in India: கடந்த ஒரே நாளில் 1,547 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,13,248 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2067 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 40 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. இரண்டாம் அலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என மத்திய மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை பெரிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும் நான்காவது அலை வருகிற ஜூன் மாதம் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதார செயலாளர் கடிதம்
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று, ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது, கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி 1000 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அண்மையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. தொற்றுநோய் பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முக கவசம் முக்கியம்
தடுப்பூசி, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது, நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இருமடங்கான கொரோனா தொற்று
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,247ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,067 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,47,594 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு அதிகரிப்பு
அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,547 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,13,248 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 1 மட்டுமே இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 40 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,22,006 ஆக உயர்ந்துள்ளது.

12,340 பேர் சிகிச்சை
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 12,340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,86,90,56,607 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 17,23,733 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications