15 பேர் கொண்ட படை.. சீனாவின் வுஹன் நகரத்திற்கு செல்லும் ஏர்இந்தியா.. இந்தியர்களை இன்று மீட்க முடிவு
Recommended Video
டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் வுஹன் நகரத்திற்கு இன்று ஏர் இந்தியா விமானம் செல்கிறது. அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்த விமானம் அனுப்பப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக சீனா மொத்தமாக நடுங்கிப் போய் உள்ளது.இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 205 பேர் பலியாகி உள்ளனர். 7900 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.
மூச்சு காற்றால் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் இதுவரை 213 பேர் சாவு .. 10000 பேருக்கு பாதிப்பு
என்ன வைரஸ்
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அங்கு விமான போக்குவரத்து, சாலை போக்குவரத்து தொடங்கி மொத்தமாக அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகள் மொத்தமாக சீனாவிற்கே விமான போக்குவரத்தை தடை செய்துள்ளது. தங்கள் நாட்டிற்கும் நோய் பரவ கூடாது என்பதால் இவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதனால் பல வெளிநாட்டு மக்கள் சீனாவிற்குள் முடங்கி உள்ளனர்.
மோசம்
முக்கியமாக இந்தியாவை சேர்ந்த பலர் சீனாவில் முடங்கி உள்ளனர். இங்கு நோய் தாக்கப்பட்டு இருக்கும் வுஹன் நகரத்தில் பல லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இந்த வுஹன் நகரம் பிரபலமான கல்வி நிறுவனங்கள் இருக்கும் பகுதி ஆகும். அதனால்தான் வுஹன் பகுதியில், அதிக அளவில் இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. யார் நன்றாக இருக்கிறார்கள் என்று விவரம் தெரியவில்லை.
என்ன நிலையில் உள்ளது
இந்த நிலையில் சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சீனாவிற்கு ஏர்இந்தியா விமானம் அனுப்பப்பட உள்ளது. இதற்காக மும்பையில் இருந்த போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 310 பேர் வரை பயணிக்கலாம். இந்த விமானம் சீனாவில் நோய் பாதிக்கப்பட்டு இருக்கும் வுஹன் நகரத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இதில் 15 இந்திய அதிகாரிகள் செல்ல உள்ளனர்.
மருத்துவ குழு
இதில் மருத்துவ குழுவும் இருக்கும். முதற்கட்டமாக நோய் பாதிப்பு இல்லாதவர்களை மீட்டு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதன்பின் நோயால் தாக்கியவர்களை மீட்க இருக்கிறார்கள். மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் , தூதரக அதிகாரிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு நோய் தாக்குதல் உள்ளாகி உள்ள வுஹன் நகரத்திற்கு இந்திய விமானம் செல்வது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .